Skip to main content

‘‘உதயசூரியனுக்கு போட்டேன்; தாமரையில் லைட் எரியுது!” - ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை நிறுத்தி ‘பொசுங்கிய’ புகார்!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

Virudhunagar Voter make trouble in casting vote

 

உதயசூரியன் சின்னம், குணசேகரன் கண்ணுக்கு மட்டும், தாமரையாகத் தெரிந்த அதிசயம், விருதுநகர் வாக்குச்சாவடி எண் 139-ல் நிகழ்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

விருதுநகர் நீராவி தெருவைச் சேர்ந்த இளைஞர் குணசேகரன், இன்று வாக்குச்சாவடி எண் 139-ல் வாக்குப் பதிவு செய்ய வந்தார். ‘அய்யோ.. நான் 1-வது பட்டனை (உதயசூரியன்) அமுக்கினேன். இரண்டாவது பட்டனில் (தாமரை) லைட் எரிகிறது. பெரிய கொடுமையாக இருக்கிறது’ என்று வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். அதனால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.  

 

விருதுநகர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ரமணனுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட, ‘தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தி சோதனை மேற்கொள்ளலாம்’ என்று அவர் கூற, திமுகவினர் அங்கு திரண்டுவிட, பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. புகாரளித்த குணசேகரனுக்கு வாக்களிப்பதற்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது. வேட்பாளர்களின் நேரடி முகவர்கள் முன்னிலையில், அவர் மீண்டும் வாக்களித்தபோது, 1-வது பட்டனை அமுக்கினார். 1-வது பட்டனிலேயே லைட் எரிந்தது. குணசேகரன் சுட்டிக்காட்டிய தாமரை எப்படியோ,  முகவர்கள் முன்னிலையில் மாயமானது. 

 

“ஓட்டு மெஷின் நல்லாத்தானே வேலை செய்யுது. தேவையில்லாம பிரச்சனைய கிளப்பி ஒரு மணி நேரத்த வேஸ்ட் பண்ணிட்டாங்க. பப்ளிக்கயும் டென்ஷன் ஆக்கிட்டாங்க.” என்று அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காத்திருந்த வாக்காளர் ஒருவர் சத்தமாக புலம்பினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

தமிழ் படிக்கத் தெரியாத நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Naam Tamilar Party candidate in Virudhunagar constituency Kousi does not know Tamil

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சி. கவுசிக் என்பவர் நேற்று விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஆட்சியர், வேட்பாளர் கவுசிக்கை உறுதிமொழி படிவத்தை வாசிக்க சொன்னார். ஆனால் தனக்கு தமிழ் தெரியாது என்று வேட்பாளர் கவுசிக் கூற, அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வாசிக்க அதனை கவுசிக் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் மேலக்கலங்கலைச் சேர்ந்த மருத்துவரான கவுசிக். நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். கவுசிக்கின் பெற்றோர்கள் வட மாநிலத்தில் வசித்து வருகின்றனர். அதனால் கவுசிக்கும் அங்கேயே படித்ததால் அவருக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும்; வாசிக்க தெரியாது என்று கூறப்படுகிறது.