Skip to main content

சிபாரிசுக்கோ லஞ்சத்துக்கோ இடமில்லை! 902 காவலர்களுக்கு ஒரே நேரத்தில் டிரான்ஸ்பர்! இப்படியும் ஒரு எஸ்.பி.!

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

virudhunagar sp who gave simultaneous transfer to 902 constables

 

விருதுநகர் மாவட்ட காவல்துறை சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. முதலில், கடந்த கால நடைமுறையைப் பார்ப்போம். காவல்துறையில் டிரான்ஸ்பர் கேட்பவர் மனுவானது மாவட்ட  தலைநகரில் உள்ள அத்துறையின் முக்கியப் புள்ளியிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும். இந்த வேலையை பார்ப்பதற்கென்றே ஒருவர் இருப்பார்.  

 

இதில், சாதாரண இடமாற்றத்துக்கு குறைந்தபட்சம் ரூ.5000 வரையும், மதுவிலக்கு போன்ற குறிப்பிட்ட பிரிவுக்கு இடமாற்றம் வேண்டுமென்றால் ரூ.20000 வரையும் கறக்கப்படும். சிபாரிசு அடிப்படையிலும் டிரான்ஸ்பர் கிடைக்கும். இந்த பழைய லஞ்ச நடைமுறையை தற்போது இல்லாமல் செய்துவிட்டார் தற்போதைய விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள். அவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் ஒன்றை அனுப்பினார். அதில், ‘தற்போதுள்ள காவல்நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிநிறைவு செய்த நிலையில், இடமாறுதல் மனுக்களை சமர்ப்பித்துள்ள காவலர்கள், விருதுநகரில் நடைபெறும் முகாமில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இது மிக அவசரம்.’ எனக் குறிப்பிட்டிருந்தார்.     

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 54 காவல்நிலையங்களில் 3200 காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், முதல்நிலைக் காவலர்கள், போக்குவரத்துக் காவலர்கள், மகளிர் காவலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பணிமாறுதல் வேண்டி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைக் கருத்தில்கொண்டே பொது பணிமாறுதலுக்கான சிறப்பு முகாமை விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தார் எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள். இடமாறுதலுக்கு மனு செய்து அந்த முகாமில் கலந்துகொண்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றும் காவலர்கள், அவர்கள் விருப்பப்பட்ட மூன்று இடங்களைக் குறிப்பிட்டனர். அந்த மூன்றில் ஒரு இடத்துக்கு இடமாறுதல் வழங்கி உத்தரவிட்டார் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள். அந்த முகாமில் ஒரே நேரத்தில் 902 காவலர்களுக்கு இடமாறுதல் உத்தரவு பிறப்பித்தார்.

 

virudhunagar sp who gave simultaneous transfer to 902 constables

 

இடமாறுதல் கிடைத்த குதூகல மனநிலையில் இருந்த காவலர்களிடம் எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள், தனது எதிர்பார்ப்பை வலியுறுத்தத் தவறவில்லை. “நீங்க விரும்பிய இடத்துக்கு உங்களுக்கு போஸ்டிங் போட்டிருக்கிறோம். நீங்க பணியாற்றவிருக்கும் காவல்நிலையங்களில் நல்லமுறையில் வேலைபார்க்க வேண்டும். அங்கே போனபிறகு, திரும்பவும் டிரான்ஸ்பர் கேட்டு  வரக்கூடாது. அங்கே போயி ஒழுக்கக்கேடா (corruption) நடந்து பெயரைக்  கெடுத்துக்கொள்ளக் கூடாது. நீங்க பண்ண வேண்டியது இந்த ரெண்டும் தான்.” என்று அறிவுறுத்தினார். வாய்மையே வெல்லும் எனும் வாசகத்தை முத்திரையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறை, இதுபோன்ற நற்செயல்களால் கோபுரமாக உயர்ந்து  நிற்கிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.