virudhunagar near chinnavaadiur factory incident

விருதுநகரில் அடிக்கடி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சின்ன வாடியூர் என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சின்ன வாடியூர் என்ற பகுதியில் ‘சக்தி’ என்ற பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பட்டாசு ஆலையில் இன்று (05.02.2025) வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 5 அறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் மீட்கப்பட்ட 7 தொழிலாளர்களும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலையில் உள்ள பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்புப் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.