Skip to main content

விருதுநகர் பாலியல் கொடூரம்... மீண்டும் பெண்ணிடம் விசாரணை... மேலும் பலர் கைதாக வாய்ப்பா?

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

Virudhunagar Incident... will many more be arrested?

 

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இரண்டாது முறையாக இன்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தொடர்ச்சியாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொள்ளாச்சி கொடூரத்தை போல் இந்த சம்பவம் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இன்று 3வது நாளாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 7 மணி நேரமாக விசாரணையானது நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேர் வீடுகளிலும் அதிரடியாகச் சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்றது. 

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இன்று மீண்டும் ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் எட்டுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நான்கு பேரை நாளை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்