Skip to main content

பாலியல் குற்றச்சாட்டு!- பள்ளிக்கல்வித்துறை அதிரடி! 

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

‘கல்வி அலுவலரின் பாலியல் வேட்டை! சிக்கித் தவிக்கும் பெண்கள்!’என்னும் தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 21- 23 நக்கீரன் இதழில், விருதுநகர் மாவட்டம்- சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மோகனும், ஊர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஆசிரியையும், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகம் சுளிக்கும் விதத்தில் நடந்துவருவது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். விருதுநகர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியைகளை விரட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மோகனுக்குப் போய் மாவட்ட கல்வி அலுவலர் என்ற கூடுதல் பொறுப்பை பள்ளிக்கல்வித்துறை வழங்கியது குறித்த ஆசிரியர் சங்கத்தினரின் ஆதங்கத்தையும் அக்கட்டுரையில் பதிவு செய்தோம். நக்கீரன் இதழிலும் இணையத்திலும் இச்செய்தி வெளிவந்தவுடன், பெற்றோர், மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் சத்திரரெட்டியபட்டி ஊர் பொதுமக்கள் சார்பில், மோகன் மீதும் அந்த ஆசிரியை மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.   

 virudhunagar govt school teacher ilegal activities School Education Action


விருதுநகர் இன்சார்ஜ் டி.இ.ஓ.வாக இருந்த மோகன், கூடுதல் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். இந்நிலையில்,‘மோகனையும் ஊர்மிளாவையும் இன்னும் ஏன் இடமாற்றம் செய்யவில்லை?’என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானமும் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினிக்கு அழுத்தம் தர, இருவரும் பிள்ளையார் நத்தம் மற்றும் கட்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

 virudhunagar govt school teacher ilegal activities School Education Action


 
“ஆதாரங்களுடன் நக்கீரன் வெளியிட்ட செய்தியால் விருதுநகர் கல்வி மாவட்டத்துக்கு நல்லது நடந்திருக்கிறது” என்று நம்மிடம் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் “ஆனாலும்.. விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் உதவியாளர்கள் இருவர் மோகனின் தகாத நடவடிக்கைகளுக்கு  சகலவிதத்திலும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் மீது ஏனோ நடவடிக்கை இல்லை.”என்று குறைப்பட்டுக்கொண்டார்.  
 
வரும் கல்வியாண்டிலாவது விருதுநகர் கல்வி மாவட்டம் பொதுத்தேர்வு தேர்ச்சியில் மீண்டும் முதலிடத்துக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறது ஆசிரியர் தரப்பு.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.