Skip to main content

விருதுநகரில் வன்முறை வெறியாட்டம்... நான்கு ஒன்றியங்களில் தேர்தல் தள்ளிவைப்பு...!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இழுபறி என்பது வத்திராயிருப்பு மற்றும் நரிக்குடி யூனியன் ஆகிய இரண்டு யூனியன்கள் மட்டுமே. வத்திராயிருப்பில் ஜான்பாண்டியனின் கட்சியான தமமுக உறுப்பினர் ரேகாவை ஆளும்கட்சி வளைத்துவிட, திமுக தரப்பு சைலன்ட் ஆனது. ஆனாலும், தலைவர் தேர்தல் நாளான இன்று, "அதிமுக தரப்பில் உறுப்பினர் ஒருவர் போட்ட ஓட்டு செல்லாது, தெரியாமல் தவறாகப் போட்டுவிட்டார். அவரை மறுவாக்கு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று  அதிமுக உறுப்பினரான சிந்துமுருகன் பிரச்சனை செய்ய, வெளியிலிருந்த அதிமுகவினர் வத்திராயிருப்பு யூனியன் அலுவலகத்துக்குள் புகுந்து  கம்ப்யூட்டரை உடைக்க, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Virudhunagar four unions local body election postponement

 



அதிமுக தரப்பில் ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு என்றாகிவிட்டதால், இரு கட்சிகளும் சமபலத்தில் குலுக்கல் நடத்த வேண்டிய நிலையில், 'குலுக்கல் நடத்தவும் கூடாது; வெற்றியை அறிவிக்கவும் கூடாது' என்று தகராறு செய்து, அதிகார பலத்தைக் காட்டியிருக்கின்றனர் அதிமுகவினர். அதனால், வத்திராயிருப்பு யூனியனில் தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நரிக்குடி ஒன்றியத்திலும் இதே அக்கப்போர்தான். திமுக – 6, அதிமுக – 5, அமமுக – 1, சுயேச்சைகள் – 2 என்பதே உறுப்பினர்களின் எண்ணிக்கை. ஒரே ஒரு அமமுக உறுப்பினரையும்,  சுயேச்சை ஒருவரையும்  அதிமுக தரப்பு தங்கள் பக்கம் இழுத்துவிட, இன்னொரு சுயேச்சை கொள்கை சார்ந்து திமுக ஆதரவு நிலை எடுத்துவிட்டார். அதனால், இரு கட்சிகளும் 7:7 என சமநிலைக்கு வந்தன. இந்தச் சூழ்நிலையில்தான் குலுக்கல் நடைமுறையை மேற்கொள்ள வேண்டிய நிலை வந்தது. அதனால் நரிக்குடி யூனியன் அலுவலகமே பரபரப்பானது.

இதையடுத்து அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் புகுந்த 4 பேர் குண்ட கும்பல் கற்களை வீசியது. தாக்குதலைத் தடுக்க முயற்சித்த டி.எஸ்.பி.வெங்கடேசன் அரிவாளால் வெட்டப்பட்டதாக தகவல் பரவியது. நரிக்குடி யூனியன் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், டி.எஸ்.பி.யை தாக்கியது சர்வ பலமும் கொண்ட ஆளும்கட்சியே என திமுக தரப்பிலும், டிஎஸ்பியை தாக்கிய கருப்புச்சட்டை அணிந்த நபர் திமுக புள்ளியின் தோட்டத்தில் வேலை பார்ப்பவர் என அதிமுக தரப்பிலும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.  இதற்கிடையில் டி.எஸ்.பி.யை அரிவாளால் வெட்டினார்கள் என்று யாரோ புரளி கிளப்பிவிட்டார்கள் என்று காக்கிகள் தரப்பில் சொல்கிறார்கள். டி.எஸ்.பி. வெங்கடேசனோ “சேரைக் கையில் எடுத்து கும்பலைத் தடுத்தேன். அவர்கள் வைத்திருந்த ஆயுதம் பட்டு கையில் சின்னதாக காயம் ஏற்பட்டுவிட்டது. அவ்வளவுதான்.” என்கிறார்.

 

Virudhunagar four unions local body election postponement

 

 

நடந்தது உண்மையிலேயே வன்முறையா? ஆளும்கட்சியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை நாடகமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.   மொத்தத்தில், நரிக்குடி யூனியன் சேர்மனாவது யார்? என்ற போட்டா போட்டியில், ‘ஒருவேளை அந்தத் தரப்பு யூனியனைக் கைப்பற்றிவிட்டால்?’ என்று சந்தேகம் ஏற்பட்டுவிட,  இன்னொரு தரப்பு  வன்முறையில் இறங்கி, நினைத்தபடி  தேர்தலை தள்ளிப்போட வைத்துவிட்டது. வன்முறைக் கும்பலின் நோக்கம், நரிக்குடி யூனியன் அலுவலகத்துக்குள் புகுந்து ஒரு உறுப்பினரையாவது தாக்கிவிட்டால் போதும் என்பதுதான். உறுப்பினர்கள் எண்ணிக்கையில் சமபலம் என்பதை உடைப்பதற்காகவே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

தற்போது, 4 பேர் கொண்ட கும்பலில் இருவர் வளைக்கப்பட்டு கைதாகியுள்ளனர். இதே விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய ஒன்றியங்களில், தேர்வான உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில்,  இந்த இரு ஒன்றியங்களின் தலைவர்களாக திமுக தரப்பில் பொறுப்பேற்க  வேண்டிய சூழ்நிலையில், அராஜகம் அரங்கேறி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தைக் கைப்பற்றி தலைவர் நாற்காலியில் தங்கள் கட்சியினரை உட்கார வைப்பதற்காக, கும்பல் கும்பலாக கட்சியினரை  அனுப்பி,  வன்முறையில் ஈடுபட வைத்து, தேர்தலை தள்ளிவைக்கச் செய்தது கொடுமை அல்லவா? தேர்தல் ஆணையம்,  விதிமுறைகளைக் கடைப்பிடித்து தேர்தலை நடத்துகிறோம் எனச் சொல்வது, தமிழகத்தில் கேலிக்குரியதாகிவிட்டது.   
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.