Virudhunagar dt sattur Muthalnayakanpatti incident

விருதுநகரில் அடிக்கடி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்தல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில், இன்று (28.09.2024) அதிகாலையில் யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே சமயம் தீ விபத்து ஏற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தீ விபத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா என மீட்புப்பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீயானது பட்டாசு ஆலையில் பெரும்பாலான பகுதியில் பரவி உள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. மேலும்இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.