Skip to main content

“நான் கரோனா இல்லீங்க..”- இளைஞரை நோகடித்த வாட்ஸ்- அப் வதந்தி!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்களின் வீடுகளில் ‘கரோனா தொற்று! உள்ளே நுழையாதே! தனிமைப்படுத்தப்பட்ட வீடு!’ என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இவ்வீட்டில் உள்ளவர்கள், சுய தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள இந்த அவசரகால நடவடிக்கையைத் திரித்து, வாட்ஸ்- அப் தகவல் மூலம் வதந்திகளாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் சிலர் பரப்பி வருகின்றனர். அதனால், “சிவகாசியில் அந்த ஏரியா பக்கம் போகாதீங்க.. திருத்தங்கல்லில் இந்த ஏரியா பக்கம் போகாதீங்க..”என்று தெருக்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அங்குச் சென்றால் கரோனா தொற்றிக்கொள்ளும் என்று பேச ஆரம்பித்துள்ளனர். 

virudhunagar district  youngster coronavirus whatsapp

இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ள தர்மராஜ் என்பவர் நம்மிடம் பேசினார். “நான் தாய்லாந்து போயிட்டு வந்து 45 நாள் ஆகுது. எனக்கு இருமலோ, காய்ச்சலோ எதுவும் இல்ல. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கேன். ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அதிகாரிகள் எங்க வீட்ல வந்து கரோனா ஸ்டிக்கர் ஒட்டிட்டு போயிட்டாங்க. இதை யாரோ போட்டோ பிடிச்சு, எனக்கு கரோனான்னு,   என்னோட செல்போன் நம்பர் இருக்கிற அந்த ஸ்டிக்கரையும் வாட்ஸ்- அப்ல போட்டு கன்னாபின்னான்னு வதந்தி கிளப்பிட்டாங்க. இப்ப பாருங்க.. சென்னை, டெல்லில இருந்தெல்லாம் போன் பண்ணி,‘உனக்கு கரோனாவாம்ல.. ஏன் வீட்ல இருக்க? உடனே ஜி.எச்.சுக்கு போ’ன்னு ஆளாளுக்கு விரட்டுறாங்க. அதுல ஒருத்தர்‘கரோனாவா பேசுறது?’ன்னு கேட்டாரு.‘அய்யா நான் கரோனா இல்ல.. என் பேரு தர்மராஜ்.. எனக்கு கொரோனா எதுவும் இல்லை’ன்னு சொன்னேன். அதுக்கு அவரு‘தம்பி, பொய் சொல்லாதீங்க.. உங்க நோய் உங்களோட போகட்டும். யாருக்கும் பரப்பாதீங்க’ன்னு அட்வைஸ் வேற பண்ணுனாரு. அக்கம் பக்கத்துலயும் தள்ளி நின்னு ஒருமாதிரி பார்க்கிறாங்க. என்னத்தச் சொல்ல? ஒவ்வொருத்தர்கிட்டயும் என்னோட நிலைமைய விளக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு. என்னோட பிரச்சனைய நக்கீரன்ல போடுங்க சார்.”என்றார் வேதனையுடன். 

virudhunagar district  youngster coronavirus whatsapp

சிவகாசியில், மேலும் மூன்று வீடுகளில்‘கரோனா தொற்று’ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்- அப் வதந்தியால், அங்கு வசிப்பவர்களும், தர்மராஜ் போலவே சங்கடத்துக்கு ஆளாகி வருகின்றனர். 
 

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை அடையாளம் காண்பது நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்! அதனை, கரோனா அச்சத்தில் மக்கள் தவிக்கின்ற நேரத்தில், தவறான கண்ணோட்டத்தோடு சிலர் பார்ப்பதும், வதந்தி பரப்புவதும், பொறுப்பற்ற செயல் ஆகும். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.