Skip to main content

அவர்கள் எலி வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்... நாம் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்! -ராஜேந்திரபாலாஜி பேச்சு!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

virudhunagar district, sriviliputhur minister rajendra balaji speech

 

 

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக் கூட்டங்களில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ‘மைக்’ பிடித்தபோது- “அ.தி.மு.க. தலைவர்களை யாராவது விமர்சனம் செய்து பேசினால், அந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேற முடியாத அளவுக்கு செயலில் இறங்கக்கூடிய, வெறித்தனமான தொண்டர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ளனர். எதிர் அணியில் உள்ளவர்கள் எலி வேட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

 

விருதுநகர் மாவட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு நாடகம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களும் விருதுநகர் மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்களா? விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. 10 வருடமாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. எப்படி திட்டங்களைக் கொண்டு வர முடியும்? ரயில் ஓடினாலும், விமானம் பறந்தாலும், தன்னால்தான் எல்லாமே நடக்கிறது என்று ஸ்டாலின் கூறுகிறார். தொகுதிக்குள் நாங்கள் ஒரு லைட் போட்டால் கூட, நாங்கள் தான் லைட் போடச் சொன்னோம் என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். அ.தி.மு.க. கஷ்டப்பட்டு செயல்படுத்தி கொண்டு வந்துள்ள திட்டங்களுக்கு உரிமை கொண்டாடுவதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் உழைத்துக் கொண்டு வந்த திட்டங்களைக் கூறுங்கள். நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த திட்டங்களுக்கு நீங்கள் உரிமை கொண்டாடாதீர்கள்.

 

virudhunagar district, sriviliputhur minister rajendra balaji speech

 

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆரை சிலர் அமைச்சர், அமைச்சர் என்றே அழைக்கின்றனர். இதை,பொதுமக்கள் நக்கலாகவும், கிண்டலாகவும் பார்க்கின்றனர். 

 

கலைஞர் மகன் மு.க.அழகிரி விரைவில் கட்சி ஆரம்பிக்கப் போகிறார். முன்னாள் மத்திய அமைச்சரான அவர், பா.ஜ.க.வில் சேர இருப்பதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் வெளிவருகிறது. இது குறித்து மு.க.அழகிரி கூறும்போது, ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார். 

 

தி.மு.க.வின் முரசொலி அறக்கட்டளைக்குச் சொந்தமாக 40 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் நிர்வாகிகளாக இருந்துவருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும்போது, எனது மகன் துரை இருக்கக்கூடாதா என்று மு.க.அழகிரி கோபத்தில் இருக்கிறார். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்தும் வருகிறார். இதுநாள் வரை காத்துக் கொண்டிருந்த மு.க.அழகிரி, தற்போது தி.மு.க.வுக்கு எதிராகத் திரும்பியுள்ளார். கலைஞரின் சொத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி, ஸ்டாலின் மீது அழகிரி புகார் கொடுத்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். 

 

virudhunagar district, sriviliputhur minister rajendra balaji speech


 

தி.மு.க.வில் குடும்பம் குடும்பமாக மட்டுமே இருப்பார்கள். கலைஞர் மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி, பிறகு அவரது மகன்.. இப்படி குடும்பக் கட்சியாகவே தி.மு.க. செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வில் உழைக்கிறவர்கள் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். 

 

தமிழக மக்களை ஏமாற்றி ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்து இருப்பதைத் தவிர, வேறு என்ன திட்டங்களை தமிழக மக்களுக்கு தி.மு.க.வினர் கொடுத்துள்ளனர். அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் கட்சி அ.தி.மு.க.தான். நான் ஒன்றும் மிட்டா மிராசுதாரர் குடும்பத்தில் பிறந்தவன் கிடையாது. அடிமட்டத் தொண்டனாக இருந்து, இன்று அமைச்சராக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். வார்டு செயலாளராகப் பணியாற்றி, தற்போது மாவட்ட கழகச் செயலாளராக.. அமைச்சராக.. உங்கள் முன் நின்று கொண்டிருக்கின்றேன். தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் மேலே வரவே முடியாது.”  என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.

 

 

Next Story

கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி; பரிசுகளை வழங்கிய முதல்வர் 

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கத்தைக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகத் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்காகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்தியது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும், தெளிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை, இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இப்பேச்சுப் போட்டிகளில் 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகிய பரிசுகளும், மாநில அளவில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.1,00,000, ரூ,50,000 மற்றும் ரூ.25,000 ஆகிய பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் 228 மாணவ, மாணவியர்களும், மாநில அளவில் 6 மாணவ, மாணவியர்களும் இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றனர்.

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்குப் பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, மா. சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர்  திண்டுக்கல் லியோனி என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.