Skip to main content

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கோவிலான அறிவாலயம்!- அமுக்கப்பட்ட எதிரணி கோழிக்குஞ்சுகள்!    

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

virudhunagar district admk councilors

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, வெற்றிபெற்ற மாற்று கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பலரும், கழுகு தூக்கிச் செல்லும் கோழிக்குஞ்சுகளாகிவிட்டனர். சிவகாசி மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் விஷயத்திலும்  ‘அது’ நடந்திருப்பதாகப் பேசப்படுகிறது.  

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர், முதல் துணை மேயர் கனவானது, பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்ற ஆளும்கட்சியான தி.மு.க.வில் பலரையும் ஆட்டுவித்துவரும் நிலையில், அ.தி.மு.க. கவுன்சிலர்களில் ஒருவருக்கும் துணை மேயராகிவிடலாம் என்ற பேராசை துளிர்த்துள்ளது. ‘ஒத்த கவுன்சிலரா போனால் துணை மேயராகிவிட முடியாது..’ என்ற அரசியல் கணக்கை உணர்ந்த அந்த அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர், இரட்டை இலையில் வெற்றிபெற்ற 11 கவுன்சிலர்களையும் கூண்டோடு கொண்டுபோய் தி.மு.க.வில் சேர்த்துவிட்டால், பலன் கிடைக்காமலா போகும் என்று பேசி முடிவெடுத்து,  ‘நீ வா.. நீ வா..’ எனக் கூப்பிட, ஆளும்கட்சியும் விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திரபாலாஜி மாவட்டச் செயலாளராக இருக்கும் அ.தி.மு.க.வை ஒன்றும் இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன், வெற்றிபெற்ற எந்தக் கட்சி கவுன்சிலராக இருந்தாலும், ஆளுக்கேற்றவாறு ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சம்வரை தலைக்கு விலைபேச, ‘மாநகராட்சியில் ஆளும் கட்சி கவுன்சிலராக இருந்தால்தானே தேர்தலில் வாக்காளர்களுக்குச் செலவழித்ததை சம்பாதிக்கமுடியும்? அதற்கு முன்பே, இத்தனை லட்சங்கள் தேடிவரும்போது வாங்கிக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்..’ என ஒன்றுகூடி ஆலோசித்து,  தி.மு.க.வை நோக்கி பறந்துவிட்டதாக அடித்துச் சொல்கிறார்கள், அதிமுக தரப்பில்.

 

ஆனாலும், 11 அ.தி.மு.க. கவுன்சிலர்களில் இருவர், ‘நேற்றுவரையிலும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டோம்; தி.மு.க. ஆட்சியை கடுமையாகத் திட்டினோம். அ.தி.மு.க. அடையாளம்தானே நம்மைக் கவுன்சிலராக்கியது? ஆளும்கட்சியின் பணச்சூதாட்டத்தில் தெரிந்தே சிக்கிக்கொண்டு, ஐந்து வருடங்களில் மேலும் மேலும் சம்பாதிப்பதற்காக, தி.மு.க.வுக்கு தாவினால் ஓட்டுபோட்ட மக்கள் என்ன நினைப்பார்கள்? எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆன்மா நம்மை மன்னிக்காது..’ என்று மனசாட்சிக்குப் பயந்து,  தாவும் 9 கவுன்சிலர்களோடு இணைந்து பயணிக்காதது, உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கிறது.   

 

ஆக, மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 24, காங்கிரஸ் 6, வி.சி.க. 1, ம.தி.மு.க. 1 எனப் பெரும்பான்மை பலமிருந்தும், சுயேச்சைகளை வளைத்துவிட்ட நிலையில், அ.தி.மு.க.விலிருந்தும் 9 கவுன்சிலர்களை தி.மு.க.வில் இணைத்து, அசுரபலமுள்ள கட்சியாக சிவகாசி மாநகராட்சியின் மேயர், துணை மேயர் இருக்கைகளில் கம்பீரமாக அமரப்போகிறது தி.மு.க. 

 

உள்ளாட்சித் தேர்தலில் செலவழித்து விட்டதைப் பிடிப்பதற்காக, 9 அ.தி.மு.க. கவுன்சிலர்களையும் தன்னோடு எங்கோ அழைத்துச் சென்றுவிட்டார் என அ.தி.மு.க. தரப்பில் சுட்டிக்காட்டப்படும் திருத்தங்கல் முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் பொன் சக்திவேல் தரப்பிலிருந்து “அப்படியெல்லாம் தி.மு.க.வுக்கு போகவில்லை. எல்லோரும் சேர்ந்து கோவில் கோவிலாகப் போய்க்கொண்டிருக்கிறோம்” என்று மழுப்பலாகப் பதில் வருகிறது.  

 

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிரடியான ஆட்டமாடி தமிழ்நாட்டு அரசியலில் ஜாம்பவனாகத் திகழ்கிறது தி.மு.க.!
    


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.