Skip to main content

கலெக்டர் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Virudhunagar Collector Meganathan

 

உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஐ.ஏ.எஸ். பணியே உயர்ந்தது. ஐ.ஏ.எஸ். என்பது, அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணியாகும். ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளைச் செய்ய முடியும்.

 

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படி இருக்க வேண்டுமென்றால் – தனது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்துக்கொண்டு, நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுப்பதற்கு அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.

 

ஐ.ஏ.எஸ். பணிக்கான தகுதிகள் என்னவென்றால் – நேர்மறை எண்ணம், தலைமைத்துவ பண்பு, ஆளுமைத்திறன், தைரியம், உறுதியான மனப்பாங்கு, தன்னம்பிக்கை, ஒவ்வொரு நெருக்கடியான சூழலிலும் அமைதியைக் கடைப்பிடித்தல், நல்ல அறிவுத்திறன், சிறப்பான பொதுஅறிவு, நல்ல தகவல்தொடர்பு திறன் எனப் பட்டியலிடலாம். 

 

Virudhunagar Collector Meganathan

 

‘எந்த மாவட்ட கலெக்டரும் சொல்லாததை, செய்யாததை, சின்னஞ்சிறு பிள்ளைகளும்கூட, கலெக்டர் பெயர் ‘மேகநாத்’ என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார், நமது விருதுநகர் மாவட்ட கலெக்டர்.’ என்று ‘ட்வீட்’ செய்துள்ளார், மணிகண்டன். ‘எல்லா மாவட்டத்துக்கும் உங்களை மாதிரி ஆட்சியர் இருந்தால், அரசுப் பள்ளி கண்டிப்பாக முன்னேறிவிடும். கொடுத்து வச்ச விருதுநகர் மாவட்டம்.’ என்கிறார் சசிகுமார். 

 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பாராட்டப்படுவது ஏன்?

 

ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டுவருகிறார் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ். பொதுமக்களின் குறைகளை அறிந்து பதிலளிப்பதுடன், பிரச்சனைகளுக்குத் தீர்வும் காண்கிறார். 

 

Virudhunagar Collector Meganathan

 

தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை குறித்த தகவலை தொடர்ந்து ட்வீட் செய்துவருகிறார் மேகநாத ரெட்டி. பதிலுக்கு மாணவர்களும் நன்றி தெரிவித்துவருகின்றனர். அதற்கு மேக்நாத ரெட்டி ‘தம்பிகளா நன்றியெல்லாம் போதும்.. சோசியல் மீடியாவை மூடிவிட்டு, சோசியல் சயின்ஸ் புத்தகத்தைக் கையில் எடுத்துப்  படியுங்கள். நாளை பள்ளியில் தேர்வு நடக்கிறது.’ என்று மாணவர்களுக்கு ஒரு அண்ணனாக இருந்து அன்புடன் அறிவுறுத்தியுள்ளார். மக்களிடம் காட்டிவரும் இந்த நெருக்கம்தான், அவரைப் பாராட்டு மழையில் நனைய வைத்திருக்கிறது.


 
அதேநேரத்தில் ‘கடையைத் திறந்தோமா? காலேஜ் இல்லைன்னு சொன்னோமான்னு இருங்க தெய்வமே! மழையில் சாப்பிட்டு தூங்குபவனைப் படிக்கச் சொல்லி கொடுமைப்படுத்த வேண்டாம், தெய்வமே!’ என்று உரிமையுடன் ரீ ட்வீட்டில் கலெக்டரையே கலாய்க்கும் ஹரிஹரன் போன்ற பொதுஜனமும் இல்லாமல் இல்லை.  

 

பழனி ராஜ்குமார் போன்றவர்களோ ‘மக்களுக்கு அறிவுரை சொல்வதெல்லாம் சரிதான்! பல வருடங்களாக வைப்பாறு தூர்வாராமல் கிடக்கிறதே? கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறதே? இதற்கெல்லாம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள்? அரசாங்கமோ, அமைச்சரோ செயல்படுவதற்கான உத்தரவு எதுவும் பிறப்பித்ததுபோல் தெரியவில்லையே?’ என்று மாவட்டத்தின் தேவைகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பவும் செய்கின்றனர்.

 

ஹரீஸ் என்பவர் ‘சமூக வலைத்தளங்களில், ஒரு மாவட்ட ஆட்சியரால் மக்களை இந்த அளவுக்கு நெருங்க முடிகிறதென்றால், தற்போதைய அரசாங்கம், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரியின் கைகளைக் கட்டிப்போடாமல், சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருப்பதுதான்!’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

மக்கள் கேள்வி கேட்பதும், மாவட்ட ஆட்சியர் பதிலளித்து தீர்வு காண்பதும், அரசாங்கம் இவற்றுக்கு இசைவதும் ஆரோக்கியமான செயல்பாடுகள் அல்லவா!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி அண்ணன் எப்பவும் அழகா சிரிப்பாரு” - விஜயபிரபாகரன் ஐஸ் மழை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Edappadi Annan will always have a beautiful smile Vijaya Prabhakaran Ice rain

சிவகாசியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் விருதுநகர் பாரளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (28.03.2024) நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றியனார். இந்தக் கூட்டத்தில், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் பேசுகையில், “இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம். எங்க அப்பா கேப்டன் விஜயகாந்த் விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒரு நாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம்.. எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுப்போச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு.

அப்போ இது யாரோட ஆசை,  கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு. ஆண்டவர் சொல்லிருக்காரு போல. நிறைய பேர் சொன்னாங்க. விஜயபிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு?. பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு. ராமானுஜபுரத்துலதான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி, பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்கதான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப்  பெருமையா நினைக்கிறேன்.

விஜயகாந்த் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றுருக்காருன்னு. என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படனும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது, அ.தி.மு.க. எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல. ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான், கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதேமாதிரி அ.தி.மு.க.வுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க.

எனக்கு உள்ள வரும் போது தே.மு.தி.க., அ.தி.மு.க. எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதுனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன். இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள்தான் ஜாஸ்தி. இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018இல் விஜயகாந்த் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல, அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளாரா உங்க முன்னாடி பேசும் போது, ரொம்ப சந்தோஷம் அடையறேன்.

இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்ன்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை, தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு. அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதுனால அந்த வார்த்தை தெரியும், சிவகாசிதான் சின்ன ஜப்பான்ன்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா. அவ்ளோ திறமைசாலிகள், வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க. இன்னைக்கு சைனா  ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு, நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு, உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வுகாண முடியும். அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணியின் முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் விஜயகாந்த் மகனா, எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்” எனப் பேசி சைகைகளால் முரசு கொட்டினார் விஜயபிரபாகரன். 

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார்.