கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் ராமன் 2- ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாலு (வயது 45). இவர் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மெய்க்காவலராகப் பணிபுரிந்து வந்தார். அதே கோவிலில் ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்த சங்கர் (வயது 58) என்பவர் இரவு காவலராகப் பணிபுரிந்து வந்தார். சங்கர் இரவு நேரப் பணிக்கு வந்த பிறகுதான் பாலு தன்னுடைய மெய்க்காவலர் பணியை முடித்து கோவிலை பூட்டி விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் இரவு நேரங்களில் வெகுநேரமாகியும் சங்கர் உரிய நேரத்திற்கு வரவில்லை. இதனால் சங்கருக்கும் பாலுவிற்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 06/05/2017 அன்று சங்கர் இரவு பணிக்கு வந்தார். அப்போது சங்கருக்கும், பாலுவிற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பாலு தன்னுடைய கையில் வைத்திருந்த சாவியால் சங்கரை தாக்கியுள்ளார். இதனால் சங்கர் தன்னுடைய மகன் சபரி என்ற சண்முகசுந்தரத்திற்கு (வயது 33) போன் செய்து சம்பவத்தைக் கூறியுள்ளார். இதனால் சண்முகசுந்தரம் தன்னுடைய நண்பர் முத்து (வயது 30) என்பவருடன் கோவிலுக்கு வந்தார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சண்முகசுந்தரமும், முத்துவும் சேர்ந்து பாலுவின் கையில் இருந்த சாவியைப் பிடுங்கி அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விருதாச்சலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணையில் சங்கர், சபரி (எ) சண்முகசுந்தரம், முத்து ஆகிய மூவரும் சேர்ந்து பாலுவைக் கொலை செய்தது உறுதியானது. அதையடுத்து நீதிபதி இளவரசன் மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் மாவட்ட அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி வாதாடினார்.