கரோனா வைரஸ் தொற்றுலிருந்து மக்கள் தற்காத்து கொள்வதற்காக இன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். ஏற்கனவே இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடந்த சில நாட்களாகவே மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், கோயில்கள், வாரச்சந்தைகள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டு வருகின்றன.

Advertisment

virudhachalam kolanjiappar kovil

அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் பெருமாள் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில், விருத்தாசலம் பழமலைநாதர் கோயில் மற்றும் கொளஞ்சியப்பர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டு ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் கோயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று சுப முகூர்த்த நாள் என்பதால் முன் கூட்டியே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை பலர் தள்ளி வைத்துள்ளனர். பலர் தமது குல தெய்வ கோயில்களில் எளிய முறையில் நடத்தினர். அதேசமயம் முன்பதிவு செய்தபடி திருமணம் செய்வதற்காக விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலுக்கு வந்த திருமண தம்பதிகள் பலர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால் கோயில் வாயில் முன்பாக சாலையில் நின்று மாலை மாற்றி, தாலி கட்டிக் கொண்டனர். உடன் வந்த உறவினர்களும் நின்றபடியே ஆசிர்வாதம் வழங்கி கிளம்பி சென்றனர்.