'Suspend officers' - women's organization demand

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயே வடமாநில மாணவியின் நண்பரை கும்பல் ஒன்று துரத்தி அடித்து அந்த மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு முயற்சி செய்துள்ள சம்பவத்திற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலச் செயலாளர் ஆர். விஜயா கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக சொல்லப்படுவதற்கு பல்கலைகழக நிர்வாகமும் என் -ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசும் நேரடி பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனில் பெற்றோர்கள் கவலைப்படுவது தவிர்க்க முடியாதது. மேலும் பெண்கள் பொதுவெளிக்கு வருவதற்கும், கல்வி கற்பதற்கும் இந்தப் பாதுகாப்பின்மை மிகப்பெரிய தடைக்கல்லாக புதுச்சேரி மாநிலம் மாறிவிடும் அபாயம் உள்ளது.‌ பெண்களின் அச்சமற்ற சுதந்திரத்தை பாஜக என் -ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதி செய்ய வேண்டும்.

Advertisment

பல்கலைக்கழக ஊழியர் ஒருவரே இந்த வக்கிரமான கூட்டு வன்புணர்வு முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக சென்று முடிந்துவிடும். குற்றம் இழைத்ததாக சொல்லப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுக்கு பிணை கிடைப்பதை புதுச்சேரி அரசு கடுமையாக ஆட்சேபனை செய்ய வேண்டும். சம்பவம் 11.1 2025 அன்று நடந்துள்ளது. ஆனால் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் 14. 1 .2025 அன்று காவல் நிலையத்தில் பெயர் குறிப்பிடாத நபர்கள் மீது தெளிவற்ற புகார் அளித்துள்ளார். செய்தித்தாள்களில் சம்பவம் பற்றிய விபரங்கள் வெளிவந்த பின்னரே பல்கலைகழக நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. இது பற்றிய விளக்கத்தை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவச் சிகிச்சை செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

பெண் மாணவிகள் பாதுகாப்பாக உணர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் விரைந்து செய்திட வேண்டும். பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுவதற்கு நிர்வாக சீர்கேடுகளே காரணமாகும். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உடனடியாக பதிவாளரையும் பல்கலைக்கழக பாதுகாப்பு பணியில் உள்ள கண்காணிப்பு காவல்துறை அதிகாரியையும் தற்காலிக பணிநீக்கம் செய்து பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி விசாரித்திட பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்திட கேட்டுக்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment