Skip to main content

காவல் நிலையத்தில் காணாமல் போன வாகனம்; புகாரை வாங்க மறுக்கும் போலீசார்

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

vilupuram thiruvennainallur pennaiyaru tractor police station incident

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாயும் பெண்ணையாறு ஆற்றுப் பகுதியில் அடிக்கடி மணல் திருட்டு நடப்பதால் போலீசார் அங்கு திடீர் சோதனை மேற்கொள்வர். அவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது அனுமதியின்றி மணல் அள்ளிச் செல்லும் டிராக்டர், டிப்பர், லாரி மற்றும் மாட்டு வண்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தி வைப்பார்கள். இது சம்பந்தமான வழக்கு முடியும் வரை காவல் நிலையத்திலேயே அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். வழக்கு முடிவடைந்த பிறகு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படும்.

 

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்பகுதியில் உள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவரின் டிராக்டர் டிப்பர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி மாவட்ட தனிப்படை போலீசார் அவரது டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது  டிராக்டர் டிப்பர் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்த்து வருவதற்காக காவல் நிலையம் சென்றுள்ளார் அருள். அங்கு சென்று பார்த்தபோது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இருந்த இடத்தில் அவரது டிராக்டர் மட்டும் நின்றிருந்தது அதனுடன் இணைக்கப்பட்டிருந்த  டிப்பரை காணவில்லை.

 

இது குறித்து அருள் போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் உரிய பதிலை கூறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அருள் காவல் நிலையத்தில் களவு போன தனது டிப்பரை கண்டுபிடித்து தரக்கோரி அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகாரை போலீசார் வாங்காமல் இரண்டு நாட்கள் அலைக்கழித்து திருப்பி அனுப்பி உள்ளனர். காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.