Skip to main content

நண்பர்களுடன் கலந்து கொண்ட மது விருந்தில் இளைஞர் கொலை...

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

viluppuram youth passes away

 

விழுப்புரம் அருகில் உள்ளது நன்நாடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் 35 வயது தனசீலன். இவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு  5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 

 

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவரது மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அதன்பிறகு தனசீலன் இரண்டாவதாக ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனசீலனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 

 

இதன் காரணமாக கடந்த தீபாவளி சமயத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவரிடம் தினமும் இப்படி குடித்து வந்து ஏன் பிரச்சனை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக்கொண்டு அவர் மனைவி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். மனைவி பிரிந்த சோகத்தில் தனசீலன் முழுநேர மது போதைக்கு அடிமையாகி இருந்து வந்துள்ளார். 

 

தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தினசரி மது அருந்துவதை வழக்கமாகச் செய்து வந்துள்ளார். மதுப் பழக்கத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டமும் விளையாடியுள்ளார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் தனது வீட்டிலேயே மது விருந்து நடத்திவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து சூதாடி உள்ளார். இரவு நீண்ட நேரம் ஆன பிறகு அவரவர் பிரிந்து சென்றுள்ளனர். ஆனால், மறுநாள் காலை தனசீலன், நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

 

அப்போது தனசீலன் முகம் சிதைந்த நிலையில் கோரமான நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலீஸார், தனசீலன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம், நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளார். 

 

அதில் தனசீலன் தலை, முகத்தில் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இரவு, அவருடன் மது அருந்திய நண்பர்கள் சூதாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தகராறு காரணமாக தனசீலன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தனசீலனின் நண்பர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதன்பிறகே கொலைக்கான முழு காரணம் தெரிய வரும் என்கிறது காவல்துறை. மது விருந்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்