Skip to main content

பத்து ஆண்டுகள் கழித்து நடந்த பழிக்குப்பழி கொலை! அதிர்ச்சியில் காவல்துறை! 

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

viluppuram district police

 

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய எல்லையில் உள்ள கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (55). அரசுப் பள்ளி சத்துணவு பொறுப்பாளராகவும், திமுக இளைஞரணி உறுப்பினராகவும் இருந்தவர். இவரது மனைவி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர் கடந்த 11ம் தேதி காலை திருச்சிற்றம்பலம் கூட்-ரோட்டில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, திண்டிவனம் டி.எஸ்.பி அபிஷேக் குப்தா (பொறுப்பு), ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. மேலும், ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி மனோஜ் சங்கர் (20), சரஸ்வதி (28), இவரது சகோதரி சாந்தி(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  

 

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையான ஜெயக்குமார் ஊரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி சங்கர்(40), கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, ஒரு கும்பல் சங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. சங்கர் கொலை சம்பந்தமாக ஆராவில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆலங்குப்பம் அருகில் உள்ள ராயப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் வரும்போது அந்த வாகனமும், கொலை செய்யப்பட்ட சங்கர் உறவினரின் இருசக்கர வாகனமும் குயிலா பாளையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

 

இதில் மணிகண்டன் தனது வாகனத்திற்கு இழப்பீடு கேட்டுள்ளார். அதற்கு சங்கர், மணிகண்டனை கோட்டை கரைக்கு அழைத்து சென்று பஞ்சாயத்து பேசியுள்ளனர். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டு, மணிகண்டனை தாக்கியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன் ஏழு பேர் கும்பலுடன் சேர்ந்து சங்கரை கோவில் திருவிழாவின் போது கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மணிகண்டன், தமிழ்வேந்தன் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இதில், தமிழ் வேந்தன் ஜெயக்குமாரின் தம்பி ஜெய்சங்கரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பி மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வர ஜெயக்குமார் உதவி செய்துள்ளார். ஜாமினில் வெளியே வந்த தமிழ் வேந்தன், இறந்த சங்கரின் மனைவி சரஸ்வதியிடம் ‘உனது கணவர் சங்கரை கொலை செய்து விட்டோம். உங்களால் என்ன செய்ய முடிந்தது’ என்று சவால் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த சரஸ்வதி, தனது தங்கை கணவரான குமரவேலிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். இதனால் தமிழ் வேந்தன் மீது சங்கர் குடும்பத்தினர்,  மேலும் ஆத்திரம் கொண்டிருந்தனர்.

 

இதற்கெல்லாம் காரணம் ஜெயக்குமார் தான் எனவே அவரை கொலை செய்ய குமரவேல் தரப்பு முடிவு செய்தது.  ஜெயக்குமாரை கொலை செய்ய முடிவு செய்த குமரவேல், சந்துரு என்பவரை கூட்டு சேர்த்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்துரு ஒரு பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் பெண்வீட்டார் மறுப்பு தெரிவித்து அப்போது, ஜெயக்குமார் தலையிட்டு பிரச்சனையை முடித்துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சந்துரு ஜெயக்குமார் கொலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

ஜெயக்குமார் கொலை சம்பந்தமாக மனோஜ் சங்கர் (20), சரஸ்வதி (28), இவரது சகோதரி சாந்தி(40) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், குமரவேல் - சந்துரு ஆகிய இருவரும் நேற்று காலை கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆரோவில் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஏழுமலை, சரஸ்வதி உறவினர், கருவடிக்குப்பம் குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.