Skip to main content

மதுபோதையில் லாரி கடத்தல்; அதிரடியாக செயல்பட்ட போலீசார்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

viluppuram district parcel lorry incident 

 

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பார்சல்களை ஏற்றி செல்லும் லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகன் சரவணன் (வயது 32) என்பவர் ஓட்டி வந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு உடல் அசதி காரணமாக ஓட்டுநர் சரவணன் லாரியின் அருகில் உறங்கி எழுந்தவர், லாரியின் சாவியை லாரியிலேயே வைத்துவிட்டு டிபன் சாப்பிடச் சென்றுள்ளார்.

 

அப்போது திடீரென ஒருவர் பார்சல் லாரியை கடத்திக்கொண்டு சென்றுள்ளார். டிபன் சாப்பிட்டு விட்டு வந்து லாரியை காணாமல் அதிர்ச்சி அடைந்த சரவணன், தனது பார்சல் லாரி குறித்து எதிரே வந்த வாகன ஓட்டிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பார்சல் லாரி விழுப்புரம் பக்கம் செல்வதாக கூறியுள்ளனர். உடனே அச்சரப்பாக்கம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து அவர்கள் மூலமாக ஓங்கூர் சுங்கச்சாவடிக்கு தகவல் அளித்துள்ளனர். அப்போது அங்கு வந்த பார்சல் லாரியை மடக்கி பிடிக்க  முயன்ற போது சுங்கச்சாவடியின்  தடுப்பு கேட்டை உடைத்துக் கொண்டு மிக அதிவேகமாக பார்சல் லாரி சென்றது. இது குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

போலீசார் பார்சல் லாரியை துரத்தி சென்று திண்டிவனம் ஜக்கம்மாபேட்டை பகுதியில் மடக்கி பிடித்தனர். அப்போது லாரியை கடத்தி வந்த நபர் தப்பிக்க முயற்சி செய்தபோது அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அந்த நபரை திண்டிவனம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை செய்ததில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்குபள்ளிகுளம் பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவரது மகன் சோமசுந்தரம் (வயது 36) என்பதும், மதுபோதையில் வாகனத்தை கடத்திச் சென்றதாகவும் கூறியுள்ளார். உடனடியாக இது குறித்து சம்பந்தப்பட்ட அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட பார்சல் லாரி ஓட்டுநர் சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.