விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது அருணாபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதுடைய சுபாஷ், இவரது சகோதரியின் கணவர் 36 வயதுள்ள அண்ணாமலை. இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள். தற்போது கரோனா பரபரப்பினால் தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் கடந்த 28 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டில் முயல் வேட்டைக்குச் செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் அன்றிரவு அவர்கள் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையும் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை. அவரது உறவினர்கள் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற அண்ணாமலை, சுபாஷ் ஆகியோரை காட்டுப் பகுதிக்குச் சென்று பல்வேறு இடங்களில் அவர்கள் தேடியுள்ளனர். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சுபாஷின் தாயார் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இதனிடையே கடந்த 30ஆம் தேதி, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில், ஒரு தனிப்படை அமைத்து காணாமல் போன இருவரையும் தீவிரமாக தேடும்பணியை முடுக்கி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் போலீசார் காட்டுப்பகுதியில், அங்குள்ள கிணறுகளில் என பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதன் அடிப்படையில் முயல் வேட்டைக்கு சென்ற சுபாஷ், அண்ணாமலை ஆகியோருடன் வேறு ஒரு இளைஞரும் வேட்டைக்கு சென்றுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்களுடன் வேட்டைக்குச் சென்ற அந்த நபரை பிடித்து தீவிர விசாரணை செய்தபோது, கோகுல்ராஜ் என்பவர் போலீசாரிடம் தானும், சுபாஷ் அண்ணாமலை ஆகிய மூவரும் முயல் வேட்டைக்குச் செல்லும்போது, அப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது நிலத்தில் இருந்த மாமரத்தில் ஏறி நான் மாங்காய் பறித்து கொண்டிருந்தேன். சுபாஸும், அண்ணாமலையும் எனக்கு முன்னே வேட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி நிலத்தில் காட்டுவிலங்குகள் வராமல் தடுப்பதற்காக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, இருவரும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த காட்சியைப் பார்த்த நான் பயந்து போனேன். நாம் இதை வெளியே சொன்னால் போலீஸ் நம்மை கைது செய்யும் என்று பயந்துகொண்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு சென்று விட்டேன் என கோகுல்ராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் அப்பனந்தல் கிருஷ்ணமூர்த்தியை போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்தனர். அப்போது அவர் போலீஸாரிடம் கடந்த 29ஆம் தேதி காலை, நான் என் நிலத்தை பார்ப்பதற்கு சென்றேன். அப்போது எனது நிலத்தில் விலங்குகளுக்கு போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சுபாஷும், அண்ணாமலையும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
எனது நிலத்தில் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் அவர்கள் இருவரும் இறந்த தகவல் வெளியே தெரிந்தால் போலீசார் கைது செய்வார்கள் என்று பயந்துகொண்டு, எனது மனைவியின் உதவியுடன் அவர்கள் இரண்டு பேரின் சடலத்தையும் அப்பகுதியிலேயே குழிதோண்டிப் புதைத்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. விஜயகுமார், திருக்கோவிலூர் தாசில்தார் ஜெயலட்சுமி, அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சடலத்தை தோண்டி எடுத்து, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, இறந்து போனவர்களின் உறவினர்களிடம் அவர்கள் உடல்களை ஒப்படைத்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, முயல் வேட்டைக்கு சுபாஷ் அண்ணாமலையுடன் சென்ற இளைஞர் கோகுல்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.