Skip to main content

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து! வருந்தும் திருநங்கைகள்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று விழுப்புரம் மாவட்டம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடுவார்கள்.அப்படிப்பட்ட கூத்தாண்டவர் கோயில் திருவிழா, கரோனா வைரஸ் நோய் பரவும் என்ற அச்சம் காரணமாகவும், அரசின் 144  தடை உத்தரவின் காரணமாகவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

k


 

ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழாவின்போது   சித்ரா பௌர்ணமி அன்று இரவு திருநங்கைகள் பூசாரிகளிடம் தாலி கட்டிக் கொண்டு மறுநாள் காலை அரவான் களபலி கொடுக்கப்பட்டதும்,தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுது வெள்ளை புடவை அணிந்து கொண்டு ஊருக்குச் செல்வார்கள்.இதற்காக இந்தியாவில் உள்ள மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கேரளா இப்படி பல்வேறு நகரங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான திருநங்கையர்கள் இந்த விழாவுக்கு வருவார்கள். அதேபோன்று தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்களும் வந்து கூடுவார்கள்.

 

 

kk

 

மிகப்பிரமாண்டமான அந்தத் திருவிழாவின் நிகழ்வுகளை உலக அளவில் பல நாடுகளிலிருந்தும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் இருந்தும் காட்சிப்படுத்த வருவார்கள். இதற்க்காக உளுந்தூர்பேட்டை,கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய நகரங்களில் உள்ள திருமண மண்டபங்கள்,விடுதிகள் திருநங்கைகள் ஆடும் விழாவைக் காண வருபவர்களும் நிரம்பி வழியும்.

 

விழாவின்போது திருநங்கைகளின் ஒப்பனைகள், சிகை அலங்காரங்கள், நடை உடை பாவனைகள் இவைகளைக் காண்பதற்கே இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். திருநங்கைகளுக்காக விழுப்புரத்தில் அழகிப்போட்டி  நடனப் போட்டிகள், பேச்சுப்போட்டி  எனப் பல்வேறு நிகழ்ச்சிகள்  நடத்தப்படும். அதன் பிறகு சித்திரா பௌர்ணமி இரவு நிலவு ஒளியில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் பகுதி முழுவதும் விளக்குகளாலும் திருநங்கைகளின் வண்ண உடைகளாலும் ஜொலிக்கும்.

http://onelink.to/nknapp

 

k

 

இதைக் கண்டுகளிப்பதற்காகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் கூட்டம் மொய்க்கும்.அப்படிப்பட்ட திருவிழாவை கரோனா என்ற வைரஸ் தடுத்து நிறுத்தி விட்டது. இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த கூவாகம் நத்தம் சிவலிங்ககுளம் தொட்டி அண்ணாநகர் கீழ் குப்பம் வேலூர் பாரதி நகர் கொரட்டூர் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊர் நாட்டாமைகள் அடங்கிய கூட்டம் நேற்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை காவல்துறை டிஎஸ்பி விஜயகுமார் அவர்களும் கலந்து கொண்டார்.

 

கூட்டத்தில் பேசிய ஊர் நாட்டாமைகள் பேசியதாவது, உலகத்தையே மிரட்டி வரும் நோய் இந்திய அளவில் தமிழக அளவில் பரவாமல் தடுப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது அதற்காக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்தத் தடை உத்தரவு மீறக்கூடாது.அப்படி இருக்கும்போது திருவிழா நடத்துவது சரியாக இருக்காது.மேலும் திருவிழாவின்போது பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் பொதுமக்கள் லட்சக்கணக்கில் ஒன்று கூடுவார்கள். இதன் மூலம் கரோனா நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை நிறுத்திவைப்பதாக ஊர் நாட்டாமைகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் செய்யப்பட்டு அதை எழுத்துப்பூர்வமாக காவல்துறையிடம் ஊர் நாட்டாமைகள் ஒப்படைத்துள்ளனர்.

 

கரோனா என்ற நோய் உலக அளவில் பிரசித்தமான கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையே நிறுத்தி வைத்துள்ளது.கரோனவின் வலிமையை எப்படிச் சொல்வது என்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்.

 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது, இளைஞர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அதே போல் ஆண்டுக்கு ஒரு முறை பல்வேறு மாநிலங்களில் இருந்து கடல் கடந்து பல நாடுகளில் இருந்தும் கூட வருகை தந்து தங்கள் உற்றார் உறவினர்களைச் சந்திப்பது போன்று சந்தித்து உரையாடி உறவாடிச் செல்லும் திருநங்கைகள், இந்த ஆண்டு அப்படிச் சந்திக்க முடியாமல் உள்ள நிலைமையைக் கேள்விப்பட்ட திருநங்கையர்கள் வருத்தத்தில் உள்ளனர்.மேலும் இந்தத் திருவிழாவிற்கு வந்து செல்வதற்காக ஆண்டு முழுவதும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து வைத்து அதைக் கொண்டு செலவு செய்து சந்தோஷமாகக் கூவாகம் திருவிழாவிற்கு வந்து செல்வோம்.அப்படிப்பட்ட திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது வருத்தமாக இருந்தாலும் கூட, இப்போதுள்ள சூழ்நிலையில் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்’’ என்கிறார்கள் பல திருநங்கைகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.