Skip to main content

பெண் மீது தாக்குதல்; தட்டிக் கேட்டவர் கொலை! 

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

villupuram north street man incident police investigation started 

 

விழுப்புரம் நகராட்சியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (வயது  45). இவர் விழுப்புரம் காந்தி வீதியில் உள்ள ஒரு அங்காடியில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வந்த இவர் நேற்று மாலை ரம்ஜான் நோன்பு இருப்பதற்காக பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணை துரத்தி தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்டு இப்ராஹிம் மனம் பொறுக்காமல் ஏன் பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இவரைப் போலவே அங்கு நின்றிருந்த தீபக் என்ற வாலிபரும் அந்தப் பெண்ணிடம் தகராறு செய்தவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். அந்த வாலிபர்கள், தங்களைத் தட்டிக் கேட்ட இப்ராஹிம் வயிற்றிலும் தீபக் முகத்திலும் கத்தியால் குத்தியுள்ளனர். இதைக் கண்டு அப்பகுதியில் இருந்த கடைக்காரர்கள் பொதுமக்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

கத்தியால் குத்தி விட்டுத் தப்பி ஓட முயன்ற இந்த இரண்டு வாலிபர்களை அப்பகுதி கடை ஊழியர்கள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். உடனடியாக அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் டவுன் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த இப்ராஹிம் மற்றும் தீபக் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இப்ராஹிம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

கத்தியால் குத்திய இரண்டு வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் விழுப்புரம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில், ராஜசேகரின் தந்தை ஞானசேகரன் என்பவருக்கும் இவர்கள் இருவரும் துரத்தி தாக்குதல் நடத்திய அந்த பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் இதை அறிந்த அவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை கடைவீதியில் மறித்து தகராறு  செய்து அடித்து உதைக்க துரத்திச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் மிரண்டு ஓடியபோது தான் இப்ராஹிம் மற்றும்  தீபக் ஆகிய இருவரும் ஏன் தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளனர்.

 

இதற்கிடையில், தகராறு நடப்பதைப் பார்த்து பயந்த அந்தப் பெண் பல்பொருள் அங்காடியில் ஓடி ஒளிந்துள்ளார். அங்காடிக்குள் புகுந்த ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரும் அந்த பெண்ணை தாக்கினர். அதை இப்ராஹிமும் தீபக்கும் தடுத்தபோது தான் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் சென்று விசாரணை நடத்தினார். பிடிபட்ட ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜசேகர் வல்லரசு இருவரும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் நகர வியாபாரிகள் இன்று கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். கடைவீதியில் நடைபெற்ற இச்சம்பவம் விழுப்புரம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.