Skip to main content

சகோதரி மீது காதல்; திருமணத்திற்கு மறுத்த பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

villupuram kandachipuram kadayam farmer family issue

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கடையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 45). இவரது மனைவி 40 வயது கலையம்மாள் (வயது 40). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். விவசாயியான கோவிந்தன் கிராமத்தின் அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி அங்கேயே வாழ்ந்து விவசாயம் செய்து வருகிறார்.

 

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் பாரதி (வயது 23). இவரின் தாயார் கண்ணன் சிறுவனாக இருந்தபோது இறந்துவிட்டார். அவரது தந்தை கண்ணனும் பாரதியை கண்டு கொள்ளவில்லை. சிறுவன் பாரதியை எடுத்து வளர்க்க யாரும் இல்லை. ஆதரவற்று தவித்த சிறுவன் பாரதியை கோவிந்தனும் அவரது மனைவியும் அழைத்து வந்து தங்கள் குழந்தைகளோடு குழந்தையாக வளர்த்து வந்தனர். பாரதி வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்துள்ளார். இவர் பள்ளிக்கூடம் சென்று படிக்காமல் கோவிந்தனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவருக்கு துணையாக விவசாய பணிகளை செய்து வந்துள்ளார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கி வைத்துக் கொண்டு அப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் வேட்டையாடச் செல்வது வழக்கம். இந்த நிலையில் கோவிந்தனின் மூத்த மகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் பாரதி. நேற்று முன்தினம் தனது வளர்ப்பு தந்தை கோவிந்தனிடம் சென்று, அவரது மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

 

அப்போது கோவிந்தன் உன்னை எனது மூன்று பிள்ளைகளுடன் சேர்த்து நான்காவது பிள்ளையாக வளர்த்து வரும் என்னிடமே திருமணத்திற்கு பெண் கேட்கலாமா எனது மகள் உனக்கு சகோதரி அல்லவா என்று எடுத்துக் கூறியுள்ளார். இதனால் கோவிந்தன் மீது பாரதிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள பசு மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார் கோவிந்தன். அப்போது கையில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, கோவிந்தனிடம் அவரது மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது கோவிந்தன் மகனைப் போல்  இருக்க, எனது மகள் உனக்கு சகோதரி முறை அல்லவா அப்படி கேட்பது தவறு என்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரதி துப்பாக்கியால் கோவிந்தனின் தலையை  பார்த்து சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்து கோவிந்தன் கீழே விழுந்துள்ளார். கோவிந்தன் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து அவரது மனைவி கலையம்மாள் வெளியே ஓடி வர அவரது காலிலும் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி உள்ளார்.

 

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் ஓடி வர இதைக் கண்ட பாரதி நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்துறை காப்பு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய கணவன் மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதி துப்பாக்கியினால் சுட்ட தகவல் அறிந்த விழுப்புரம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பி ஓடிய பாரதியை காப்பு காட்டில் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினரும் போலீசாரும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் அன்று இரவு ஒரு பாறையின் மீது ஏறி நின்ற பாரதி என் கிட்டே நெருங்கினால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் மேலும் கையில் நாட்டு வெடிகுண்டு வைத்துள்ளேன் அதை வீசி விடுவேன் என்று வனத்துறையினரையும் காவல்துறையினரையும் விரட்டி வருகிறார் பாரதி. அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் போலீசாரும் வனத்துறையினரும் பாரதியை பிடிப்பதில் திணறி வருகின்றனர். இருப்பினும் வனத்துறை காட்டில் சுற்றி வரும் பாரதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி மடக்கி கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோவிந்தன் கலையம்மாள் தம்பதிகளை அவர்கள் வீட்டில் மகன் போன்று வளர்ந்த இளைஞன், அவர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.