Skip to main content

கூலிப்படையினர் அட்டகாசம்; ஆள்மாறி அரிவாள் வெட்டு

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

 

villupuram incident rowdy police investigation

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது ஆகூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் யமராஜன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 30) கூலி வேலை செய்துவருகிறார். நேற்று முன்தினம் (20/05/2022) இரவு தந்தை, மகன் இருவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர் அவர்களது குடும்பத்தினர் அனைவரும், உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்ற நிலையில், அன்று இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கொட்டகையில் கோபாலகிருஷ்ணன் தனியாக உறங்கி கொண்டிருந்தார். 

 

அப்போது, அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை தூக்கிச்சென்று, அவரை அரிவாளால் முகம் தலை உட்பட உடலில் பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில், நிலைதடுமாறிய கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து விழுந்துள்ளார். அவர் உடல் முழுவதும் சேறும், சகதியும் ரத்தமும் ஆக வழிந்துள்ளது. 

 

இதை பார்த்து பதறிப்போன அவரது தந்தை எமராஜன், மகனின் நிலையைக் கண்டு அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், அவர்கள் கோபாலகிருஷ்ணனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து ரோசனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் அப்பகுதியினர்.

 

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பகுதி பொதுமக்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் சென்னை பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் 3 பேரும் இப்பகுதிக்கு வந்ததாகக் கூறியுள்ளனர். கோபாலகிருஷ்ணனின் சகோதரர் சசிகுமார் என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டுவதற்காக, அந்த கும்பல் வந்திருக்கலாம் எனவும், அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணனை ஆள் மாறி வெட்டி விட்டு தப்பி இருக்கலாம் எனவும், காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

 

அவர்கள் ஆட்டோவில் வந்து சென்றதை காவல்துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்ததின் பேரில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது வெள்ளிமேடு பேட்டை போலீசார் சந்தேகத்திற்கிடமான ஒரு இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்யாணபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் ரஞ்சித்குமார் என்பவரின் மகன் பிரேம்குமார் (வயது 23) என்பது தெரிய வந்துள்ளது. 

 

கோபாலகிருஷ்ணனை வெட்டிய வழக்கில் இவரை வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவரிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கோபாலகிருஷ்ணனை வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.