Skip to main content

மருத்துவமனையில் செவிலியருக்கு கத்திக்குத்து; காதல் கணவர் கொடூரம்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

villupuram govt medical college hospital nurse incident
கோப்பு படம்

 

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரணி என்பவர் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் விக்கிரவாண்டி அருகே உள்ள ஈஞ்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமாரும் காதலித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது பரணி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக வேலை செய்து வருகிறார்.

 

இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அது சம்பந்தமான வழக்கு நடப்பதாகவும் தெரிகிறது. கணவன் மனைவி ஒன்றாக இருக்கும்போது பரணியின் நகைகளை வாங்கி சரத்குமார் விற்று செலவு செய்துள்ளார் இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் கோபித்துக் கொண்டு பரணி விழுப்புரத்தில் உள்ள தனது தந்தை தேசிங்கு வீட்டிற்கு வந்து வசித்து வருகிறார்.

 

சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே பிரச்சனையில் இருக்கும் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சரத்குமார் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். சரத்குமார் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் சரத்குமார் பூச்சி மருந்து சாப்பிட்ட நான் இனிமேல் பிழைக்க மாட்டேன். கடைசியாக என் மனைவியின் முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த செவிலியர்களிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார். சக செவிலியர்கள் இது குறித்து பரணியிடம் கூறியுள்ளனர். கணவன் உயிருக்கு போராடுவதாகக் கூறியதைக் கேட்டு கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரை பார்ப்பதற்கு அவர் இருக்கும் மருத்துவமனை வார்டு பகுதிக்கு சென்றுள்ளார் பரணி. அப்போது சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரணி தலையில் சரமாரியாக பல இடங்களில் குத்தியுள்ளார். இதில் பரணிக்கு தலையில் பல இடங்களில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டது. இதனை நேரில் கண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

 

அப்போது அங்கிருந்த பொதுமக்களில் சிலர் சரத்குமாரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். தலையில் கத்திக்குத்து காயம்பட்ட பரணியை சக செவிலியர்கள் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனை வளாகத்தில் மனைவி மீது கத்திக்குத்து நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.