விழுப்புரம் அருகே பட்டப் படிப்பிற்காக விண்ணப்பிக்க பழங்குடியினர் சான்று கேட்டு விண்ணப்பித்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் தருமாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, உப்புவேலூர் அருகில் உள்ளது டி.பரங்கிணி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த முனியாண்டி மகள் தனலட்சுமி (17), அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரண்டாம் வகுப்பு படித்து முடித்து பொதுத்தேர்வில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது உயர்கல்வி படிப்பதற்காக இருளர் பழங்குடியினர் சான்று கோரி விண்ணப்பித்துள்ளார்.
இவர் மனு செய்து 5 மாத காலமாகியும் தனக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கடந்த வாரம் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்திருந்தார். அதன்பேரில் கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கிராமத்தில் உள்ள சிலர் தனலட்சுமி பழங்குடி இருளர் சாதி இல்லை என்றும், அவருக்கு அந்த சான்று வழங்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் தனலட்சுமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது, சாதிச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்களில் நான்கு பேர் தன்னைத் தாக்கியதாகவும், மானபங்கம் செய்ததாகவும் தனலட்சுமி கிளியனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.
அதன் பேரில் பகுதியை சேர்ந்த பெருமாள் ஏழுமலை துரைக்கண்ணு கோபால் ஆகிய நான்கு பேர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே தனலட்சுமி தாக்குதலுக்கு ஆளான விவகாரம் மாநில மனித உரிமை ஆணையம் வரை புகாராக சென்றுள்ளது. இதையடுத்து மனித உரிமை ஆணையம் தனலட்சுமி விவகாரம் குறித்து என்ன நடந்தது என்பதை இரண்டு வாரங்களில் அறிக்கை அனுப்புமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.