Skip to main content

“மனு அளித்தால் மட்டும் பட்டா மாற்றம் செய்து தர முடியாது” - வி.ஏ.ஓ.வை அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

villupuram district vao action taken by police

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் அசோக் குமார் (வயது 29). இவர் சென்னையில் உள்ள ஒரு கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமான பூர்வீக வீட்டுமனையை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்யக்கோரி ஒலக்கூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனுக்கு உரிய ஆவணங்களுடன் மனு செய்துள்ளார். இதன் பிறகு கருணாகரனை நேரில் சந்தித்து பட்டா மாற்றம் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அசோக் குமார் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலரான கருணாகரன், "வெறும் மனு அளித்தால் மட்டும் பட்டா மாற்றம் செய்து தர முடியாது. உங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருவதற்கு 5000 ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தர முடியும்" என்று கூறியுள்ளார்.

 

தங்களுக்குச் சொந்தமான பூர்வீக வீட்டுமனையை உரிய ஆவணங்கள் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்வதற்கு எதற்காக லட்சம் கொடுக்க வேண்டும் என்று வேதனை அடைந்த அசோக் குமார், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று அசோக் குமாரிடம் ரசாயனம் தடவிய 5000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அசோக் குமார் நேற்று ஒலக்கூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனிடம் 5000 ரூபாய் லஞ்சப் பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பாலசுந்தர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலேயே கருணாகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் போதே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறையினர் மத்திலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.