Skip to main content

"உயர் அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்" - இன்ஸ்பெக்டர் மனைவி கதறல் 

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

villupuram district police inspector and sub inspector suspend  issue 

 

போலீஸ் இன்ஸ்பெக்டரான தனது கணவரை சஸ்பெண்ட் செய்ததற்காக, மனைவி  இரண்டாவது முறையாகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கடந்த 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்  சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் எனக் கூறி அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கடந்த 25 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். சக திருநங்கைகளால் அவர் மீட்கப்பட்டு  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "சூரப்பட்டு ராஜாவும் நானும் காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ராஜாவின் குடும்பத்தினர் எங்கள் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டார். அவரைப் பிரிந்து என்னால் வாழ முடியாது என்பதால் நான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார்". 

 

உரிய விசாரணை செய்து முறையாக வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூறி கிடார் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுதா ஆகிய இருவரையும் டிஐஜி பாண்டியன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 31ஆம் தேதி நள்ளிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரின் மனைவி சரஸ்வதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கணவரை பழிவாங்கும் நோக்கத்துடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அவரது போராட்டத்தைத் தடுத்து நிறுத்தி அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த அவரது கணவர் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் முன்பாக சரஸ்வதி தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயல, சக போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் தன் மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . இந்த நிலையில் நேற்று வீட்டில் மீண்டும் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

நேற்று தனது செல்போன் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சரக டிஐஜி ஆகியோருக்கு போன் மூலம் குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அதில், "உயர் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக எனது கணவரை பணி நீக்கம் செய்துள்ளனர். எனவே எனது கணவருக்கு நியாயம் கிடைக்கச் செய்வேன். எனது இறப்புக்குப் பிறகு எனது பிள்ளைகளுக்கும், கணவருக்கும் உயர் அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்" என்று குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளார்.  வழக்கறிஞரான அவர் இது குறித்து தான் சார்ந்திருக்கும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சிலருக்கும் செல்போன் மூலம் அதே குறுந்தகவல் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு  காவல்துறை தலைவருக்கு மனு அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.