Skip to main content

இழப்பீடு வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

villupuram district collector office court order

 

விழுப்புரம் நகரை ஒட்டியுள்ளது கிழக்கு சண்முகாபுரம் காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம். இவர் நகரின் விரிவாக்க பகுதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு சொந்தமான கிழக்கு புதுச்சேரி சாலை அருகில் ஆறு ஏக்கர் 75 சென்ட் நிலத்தை, கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழக அரசு நில ஆர்ஜித சட்டத்தின்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு வழங்கியுளளார்.

 

இதில் சண்முகத்தின் மகன் சிவானந்தம் என்பவருக்கு சேர வேண்டிய ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலத்திற்கு, ஒரு சதுர அடிக்கு எட்டு ரூபாய் பத்து பைசா என்று இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 332 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த தொகை அப்போதைய சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறி சிவானந்தம் விழுப்புரம் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு, சதுர அடிக்கு 500 ரூபாய் எனக் கணக்கிட்டு நிலம் கையகப்படுத்தப்பட்ட 1991ஆம் ஆண்டு முதல் அதற்கான வட்டியுடன் சேர்த்து மொத்த இழப்பீட்டுத் தொகையாக 39 கோடியே 36 லட்சத்து 59 ஆயிரத்து 337 வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அப்போது முதல் சிவானந்தத்திற்கு இழப்பீடு தொகை வழங்காமல், மாவட்ட ஆட்சியர் வீட்டு வசதி வாரிய அலுவலர் மற்றும் அதிகாரிகள் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து மனுதாரர் முருகானந்தம் நீதிமன்றத்தில் நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து அவருக்குரிய இழப்பீட்டுத் தொகையை மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த தொகையை வழங்க மீண்டும் காலதாமதம் ஆகியுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நீதிபதி மோனிகா உத்தரவிட்டுள்ளார். உத்தரவையடுத்து நேற்று (07/04/2021) காலை 11.00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் சென்றனர்.

 

அவர்களைப் பார்த்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளையும் வரவழைத்து மூன்று தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இழப்பீட்டுத் தொகை வழங்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில், அதற்கு மூன்று தரப்பும் ஒப்புக்கொண்டதால் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுச் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.