Skip to main content

சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு! - குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்களுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

villupuram child incident chennai high court police

 

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அ.தி.மு.க. பிரமுகர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த மே மாதம் 10- ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரையில் கடை நடத்தி வந்த ஜெயபால் மீதிருந்த முன்விரோதம் காரணமாக, பத்தாம் வகுப்பு படித்துவந்த அவரது மகள் ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர்கள் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும், வீட்டில் தனியாக இருந்தபோது, கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், முருகன்,  கலியபெருமாள் ஆகிய இருவரும், தந்தை மீதிருந்த முன்விரோதம் காரணமாக, தன்னை தீவைத்து எரித்ததாகத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, முருகன் மற்றும் கலியபெருமாள் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டு, அவர்களை திருவெண்ணெய் நல்லூர் போலீசார் கைது செய்த நிலையில், கடந்த மே மாதம் 30- ஆம் தேதி,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 

அதன்படி இருவரும் தற்போது கடலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முருகனின் மனைவி அருவி மற்றும் கலியபெருமாளின் மனைவி சவுந்தரவள்ளி ஆகிய இருவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

 

மனுவில், ஆதாரங்கள் இல்லாமல், உள்நோக்கத்துடன் தங்கள் கணவர்கள் இவ்வழக்கில் சேர்க்ககப்பட்டுள்ளதாகவும், வழக்கின் ஆவணங்கள் தங்களுக்குத் தமிழில் தரப்படவில்லை என்றும், இருவரும் தானாகவே முன்வந்து சரணடைந்த போதும், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தது போல திரித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல, முருகனின் மனைவி, அவரது செல்போன் அழைப்பு விவரங்களையும், காவல் நிலையத்தின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும், உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டுமென, தனியாகக் கோரியுள்ளார்.

 

தங்களின் கணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, அவர்கள் மீது பிறப்பித்த குண்டாஸ் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு, இன்று (01/07/2020) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக வக்கீல் எஸ். சரவணகுமார் ஆஜராகி,  மனுவுக்கு பதில் அளிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார். 

 

http://onelink.to/nknapp

 

இதைக் கேட்ட நீதிபதிகள், மனு குறித்து உள்துறைச் செயலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கடலூர் சிறைத் துறை கண்காணிப்பாளர் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்குத் தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.