Skip to main content

அன்பு ஜோதி ஆசிரமத்தின் பகிர் பின்னணி; வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் 

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

villupuram anbu jothi foundation case changed cbcid investigation 

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அனுமதியின்றி அன்பு ஜோதி என்ற பெயரில் இயங்கி வந்த ஆதரவற்றோருக்கான ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் நடந்ததாக எழுந்த புகாரின்படி சீல் வைக்கப்பட்டது. ஆசிரமத்தின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜூபின், கேரளாவைச் சேர்ந்த மேலாளர்  விஜி மோகன்(வயது 46), பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி, பூபாலன், சதீஷ், தாஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் பெங்களூருவில் அம்மாநில காவல்துறையுடன் இணைந்து அங்குள்ள ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அதில், பெங்களூருவில் ஆட்டோ ராஜா என்பவர் மிகப்பெரிய அளவில் ஆசிரமம் மற்றும் மருத்துவமனை நடத்துவதும் அங்கு அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்ளிட்ட 53 பேரை கடந்த 2021ல் ஒப்படைத்து அதற்கான ரசீதை ஜூபின் பேபி பெற்றுள்ளார். கடந்த 2022 மார்ச் 4ம் தேதி ஜபருல்லா உள்ளிட்ட 13 பேர் குளியலறை ஜன்னல் கம்பியை உடைத்துவிட்டு தப்பியது தெரியவந்தது. 53 பேரில் 20 பேர் மட்டும் ஆசிரமத்தில் உள்ளனர். 20 பேர் உடல்நிலை சரியாகிவிட்டதால் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதில் மாயமான 13 பேரில் 2 பேர் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு வந்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 11 பேர் காணாமல் போய் ஓராண்டு ஆகிவிட்டது என்பதால் அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை.

 

ஆட்டோ ராஜாவை கைது செய்து விசாரணை நடத்த தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். இதே போல், குண்டலப்புலியூர் ஆசிரமத்திலிருந்து ஜூபின் பேபி ராஜஸ்தான் மாநிலத்திற்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி வைத்திருக்கிறார். கர்நாடகா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் நடத்தும் காப்பக உரிமையாளர்கள் இணைந்து மிகப்பெரிய நெட்வொர்க் வைத்திருப்பது தனிப்படை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் இருந்து ஆண்டுக்கு 30 முதல் 50 பேரை கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற  வெளிமாநிலங்களின் காப்பகத்திற்கு அனுப்பி உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டதா என மாயமானவர்களின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதால் இந்த வழக்கு தொடர்பான விவரங்களை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இதுகுறித்து செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி கூறுகையில், "பலர் காணாமல் போனதால் ஆசிரமத்தின்  உரிமையாளர் ஜூபின் பேபியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை  நடத்தினோம். ஆனால் அவர் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த வழக்கில் புலன் விசாரணைக்கு 4 தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

இதற்கிடையே கொரோனா காலத்திலும் அதற்கு முன்பும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த ஆதரவற்றோர்களின் சடலங்களை ஜூபின் பேபி எடுத்து வந்து அடக்கம் செய்துள்ளார். சிலரின் சடலங்களை போலீசார் முன்னிலையில் புதைத்துவிட்டு  சுமார் 300 சடலங்களை இதுவரை எரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி எரிக்கப்பட்டவை அனைத்தும் ஆதரவற்ற சடலங்களா அல்லது ஆசிரமத்தில் இருந்து மாயமானவர்களையும் இதே பட்டியலில் சேர்த்து அவர் எரித்திருக்கலாமா என அஞ்சப்படுகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மரிய ஜூபின் (வயது 45). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர், மகள்களைப் பிரிந்த மரியாவுக்கும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜூபின் பேபிக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கேரளாவில் இருந்து கடந்த 2003ல் விழுப்புரம் வந்தவர்கள் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது ஜூபின் பேபியின் கேரள நண்பர் கோயம்புத்தூரில் ஆதரவற்றோர் ஆசிரமம் ஒன்று நடத்தி வருவதைக் கண்ட அவர், தானும் அதேபோல் ஆசிரமம் அமைக்க முற்பட்டு, நண்பரின் ஆலோசனையுடன் குண்டலபுலியூரில் சிறிய அளவில் கட்டிடம் கட்டி அதில் 5 முதல் 10 நபர்கள் வரை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்து அன்பு ஜோதி ஆசிரமம் தொடங்கி உள்ளார். ஆதரவற்றோரை காண்பித்து பல நன்கொடையாளர்களிடமிருந்து பணம் பெற்று கேரள மாநிலத்தில் பல கோடி மதிப்பிலான பல்வேறு அசையா சொத்துக்களை மனைவி மற்றும் உறவினர்கள் பேரில் வாங்கி குவித்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 

பண்ருட்டியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர், ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். நிர்வாகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த டிரைவரை அவர் அடித்து துன்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. போலீசார் அந்த டிரைவரை பிடித்தால் ஆசிரமம் குறித்த மேலும் பல மர்ம தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பத்மா, புதுச்சேரி தட்சிணாமூர்த்தி நகரைச் சேர்ந்த  அண்ணன் தம்பிகளான கண்ணதாசன், நடராஜன் உட்பட 4 பேரும் மாயமானதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் இருந்து மருந்து வகைகள், முக்கிய ஆவணங்கள், 10க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஒரு கம்ப்யூட்டர், ஒரு லேப்டாப் மற்றும் ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஆகியோரின் பாஸ்போர்ட்களை வருவாய்த்துறை மற்றும் போலீசார் கைப்பற்றினர்.

 

villupuram anbu jothi foundation case changed cbcid investigation 

ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 2 பெண்கள் தனித்தனியாக புகார்கள் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நேற்று விழுப்புரம் நீதிபதி அகிலாவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். ஆசிரமத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 2 பெண்களும் தனித்தனியாக வாக்குமூலம் அளித்ததை நீதிபதி பதிவு செய்துள்ளார். ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதில்லை. ரேஷன் அரிசியை கடத்தல் கும்பலிடம் இருந்து மொத்தமாக வாங்கி அவற்றை சமைத்து வழங்கி உள்ளனர். ஆசிரமத்தில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கு எப்போதாவது தான் குழம்பு போன்றவை வழங்கப்படுகிறதாம். மற்ற நாட்களில் கஞ்சி மட்டுமே காய்ச்சி கொடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.