Skip to main content

மின்சாரம் இல்லை; விறகு கட்டையே மெழுகுவர்த்தி; அவல நிலையில் கிராமங்கள்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

Villagers without electricity due heavy rains Sirkazhi

 

‘ஒரே ராத்திரில எங்க வாழ்க்கையே அழிஞ்சி போகுற மாதிரி ஆயிடுச்சு. இப்படி ஒரு பேய்மழைய இதுவரைக்கும் நாங்க பாத்ததே இல்ல’ எனக் கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள், மெழுகுவர்த்தி வாங்கக் கூட காசு இல்லாமல், வெளிச்சத்திற்காக விறகுகளைப் பற்ற வைக்கும் அவலம் மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ளது.

 

வங்கக்கடலில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்த வண்ணம் இருக்கிறது. அதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் ஆகிய முக்கிய இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கேவரோடை, இரவுக்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களின் பிரதான சாலைகள் வெள்ளநீரால் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்த நிலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தனர். கனமழை காரணமாக கடந்த சனிக்கிழமையிலிருந்தே பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, “மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீர் அளவு குறைந்தால் மட்டுமே மின்சாரம் வழங்க முடியும். 14ம் தேதி காலைக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் அளிக்கப்படும்.” என்று தெரிவித்திருந்தார்.

 

Villagers without electricity due heavy rains Sirkazhi

 

இதுவரை 21 கிராமங்களில் மழைநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது என அரசுக் கணக்கெடுப்பு கூறுகிறது. அந்தக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் மின்சாரம் இல்லாததால் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். பலவிதமான விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதால் இரவு முழுவதும் தூங்காமல் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மேலும், மெழுகுவர்த்தி வாங்க கூட வழி இல்லாமல் வீட்டின் வாசலில் காய்ந்த விறகு சுள்ளிகளை வைத்து நெருப்பு மூட்டி பொதுமக்கள் இரவுப் பொழுதைக் கழித்து வருகின்றனர். அது மட்டுமின்றி, பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் நிலத்தடி நீரையே குடிநீராகப் பயன்படுத்தும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து, “நாங்க எத்தனையோ பெருமழையையும், புயலையும் பார்த்திருக்கோம். ஆனா, இப்படியொரு பேய்மழையை எங்க வயசுல பாத்ததில்ல. ஒரே ராத்திரில எங்க வாழ்க்கையே அழிஞ்சி போகுற மாதிரி ஆயிடுச்சு” என அந்தக் கிராமத்து மக்கள் கண்ணீர் மல்க பேசியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.