Skip to main content

“வழக்கைப் பார்த்துக்கொள்ளலாம் மீன் கிடைத்ததே பெரிய சந்தோஷம்”- கலைந்து சென்ற கிராம மக்கள்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

the villagers who dispersed with murmurs

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சூளாங்குறிச்சி கிராமத்தின் அருகே மணிமுத்தாறு அணை உள்ளது. பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இந்த அணைப் பகுதியில் மீன் வளர்ப்பதற்கு ஏலம் விடப்பட்டு 40 லட்சம் மதிப்பில் ஏலம் எடுத்து மீன் வளர்த்து வந்தனர். இந்த ஆண்டுக்காக அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் விடப்பட்டு அறுவடைக் காலம் முடிந்த நிலையில் அதேபோல் மீன் வளர்ப்புக் குத்தகை காலம் முடிந்து அதன் அறுவடைக் காலமும் வந்தது.

 

டேமை மீன் குத்தகைக்கு எடுத்தவர்கள் கடைசி நேரம் என்பதால் பொதுமக்களை மீன்பிடிக்க அனுமதித்துள்ளனர். இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சூளாங்குறிச்சி, அகரக்கோட்டாலம், வாணியேந்தல், ரங்கநாதபுரம், பழைய சிறுவங்கூர், ஆலத்தூர், பாலப்பட்டி அணைக்கரை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து சூளாங்குறிச்சி டேம் பகுதியில் மீன்பிடி திருவிழா நடத்தினர். இதில் கொடுமை என்னவென்றால் சமூக இடைவெளி எதுவும் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் கூட்டமாகத் திரண்டு டேமுக்குள் இறங்கி மீன்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். மீன்பிடிக்க இறங்கிய மக்கள் சேறும் சகதியுமாக உள்ள தண்ணீரில் மூழ்கிச் சிக்கி விபரீதம் ஏதும் நிகழாத வண்ணம் அனைவரையும் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

 

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் தொடர்ந்து மீன் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். டேம் பகுதியில் விரால் மீன், கெண்டை மீன், ஜிலேபி என ஏராளமான மீன்கள் மக்களுக்குக் கிடைத்தன. அந்த ஆர்வத்தில் போலீசார் எச்சரிக்கையும் மீறி சுமார் 3000 கிலோ அளவிற்கு மீன்களை பொது மக்கள் ஆர்வமாகப் பிடித்துச் சென்றனர். செய்வதறியாது திகைத்த போலீசார் அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டியதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து சங்கராபுரம் மீனவர் சங்கத் தலைவர் மணி, அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை, முருகன், ரோடு மாமந்தூர் பாண்டியன், ரங்கநாதன், அந்தோணி, உட்பட, சுமார் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் போட்ட வழக்கைப் பார்த்துக்கொள்ளலாம் மீன் கிடைத்ததே பெரிய சந்தோஷம் என்று கூறிய படி மக்கள் கலைந்து சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.