Skip to main content

என்.எல்.சிக்காக நில அளவீடு செய்ய வந்த ஆட்சியர்,அதிகாரிகளை கிராம மக்கள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

jkl


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்கு நிலக்கரி எடுப்பதற்காகப் பல வருடங்களுக்கு முன்பு கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் நிலங்களைக் கொடுத்துள்ளனர். வீடு மற்றும் நிலங்களை என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தியபோது, நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு என்.எல்.சி நிறுவனம் உரிய இழப்பீடும் நிரந்தர வேலையும் தராமல் பல வருடங்களாக ஏமாற்றி வந்த நிலையில் தற்போது முதலாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக நெய்வேலி கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் ஏராளமான காவலர்களுடன் என்.எல்.சி அதிகாரிகள் மற்றும் நில அளவீடு செய்யும் அதிகாரிகள், அளவீடு செய்வதற்காக வருகை தந்தனர். 

 

அப்போது பொதுமக்கள் தாங்கள் ஏற்கனவே என்.எல்.சி நிறுவனத்திற்குக் கொடுத்த நிலம் மற்றும் வீடுகளுக்குத் தற்போது வரை உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் கிடைக்காதபோது மீண்டும் தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில், என்.எல்.சிக்காக, எங்களுடைய பகுதிகளை அளவீடு செய்ய வருவது நியாயம்தானா?  என பல்வேறு கேள்விகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ஒற்றுமையாக  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரை அளவீடு செய்ய விடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அளவீடு செய்ய முடியாமல் மாவட்ட ஆட்சியர் திரும்பி சென்றார். 

 


இதேபோல் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக, கம்மாபுரம் அருகேயுள்ள கரிவெட்டி கிராமத்திலும் என்.எல்.சி அதிகாரிகள் நிலம் கையகப்படுத்த வருவதாகத் தகவல் அறிந்தவுடன் பா.ம.க கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ் தலைமையில் ஏராளமான பா.ம.கவினரும், கிராம மக்களும் கூடினர். பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் என்.எல்.சி அறிவித்துள்ள இழப்பீடு போதாது என்றும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்றும், அதுவரை நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது என்றும் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்  சுரங்க விரிவாக்கப் பணி தடுத்து நிறுத்தப்பட்டு என்.எல்.சி அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

என்.எல்.சி நிறுவனத்திற்காகப் பொதுமக்களின் நிலத்தை அளவீடு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரைப் பொதுமக்கள் தடுத்துத்  திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .