Skip to main content

மன்றம் வைத்து பனை வளர்க்கும் கிராம மக்கள்... 37 ஆண்டில் பல்லாயிரம் பனைமரங்களை வளர்த்து சாதனை!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

Villagers grow palms with a forum ... A record of growing tens of thousands of palm trees in 37 years!

 

"வெளிநாட்டு மரங்களால் எந்த பயனும் இல்லை. பூக்காது, காய்க்காது. எல்லாம் மரபணு மாற்றப்பட்ட மரங்கள். ஆனால் இதுவரை மரபணு மாற்றப்படாதா, மாற்ற முடியாத ஒரே மரம் பனைமரங்கள் மட்டும் தான்" என்று கடந்த வாரம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சட்டமன்றத்தில் பேசினார். இன்று அவரே ஒரு கிராமத்தினரைப் பெருமையாகப் பாராட்டியுள்ளார். அது எந்த கிராமம்? எதற்காகப் பாராட்டு என்பதைப் பார்ப்போம்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றியுள்ள பல கிராமங்களில் திருவள்ளுவர் மன்றம், நேதாஜி மன்றம் எனப் பல தேசிய தலைவர்களின் பெயர்களில் நற்பணி மன்றங்கள் உருவாகி சுதந்திர கால பரப்புரைக்காகப் பயன்படுத்தியதோடு சுதந்திரத்திற்குப் பின்னர் கிராம வளர்ச்சிக்காக மன்றங்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன்று ஒவ்வொரு கிராமத்திலும் சினிமா நடிகர்கள் பெயரில் இளைஞர்கள் மன்றங்கள் வைத்து நலப்பணிகள் செய்வது போலத் தான் 30 ஆண்டுகளுக்கு முன்பும் நற்பணி மன்றங்கள் வைத்திருந்தனர்.

 

Villagers grow palms with a forum ... A record of growing tens of thousands of palm trees in 37 years!

 

அப்படித்தான் 1984 ம் ஆண்டு கீரமங்கலம் அருகில் உள்ள பாண்டிக்குடி என்னும் கிராமத்தில் கிராம வளர்ச்சிக்காக உருவானது தான் மகாகவி பாரதியார் நற்பணி மன்றம். இந்த மன்றத்தின் செயல்பாடு வழக்கம் போல விளையாட்டுப் போட்டிகள் மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடவில்லை. மாறாக அடுத்து வரும் சந்ததிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியாகச் செய்துள்ளது. அதாவது அதே ஊரில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாண்டிக்குளம் என்னும் ஏரியில் முள் செடிகள் மண்டி கிடப்பதைப் பார்த்த அப்போதைய இளைஞர்கள் அதாவது மகாகவி பாரதி நற்பணி மன்றத்தினர், ஏரி முழுவதும் பனை விதைகளை நட திட்டமிட்டனர். அருகில் உள்ள பனங்குளம் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ள பனைமரத் தோப்பில் விழும் பனம்பழங்களை சேகரித்து பாட்டிக்குளம் ஏரியில் புதைக்கத் தொடங்கினார்கள். அந்த விதை ஒரு வருடம் கடந்து  சில விதைகள் முளைத்தது. நிறைய விதை முளைக்கவில்லை என்று பலரும் ஒதுங்கிக் கொள்ள திருப்பதி உள்ளிட்ட ஆர்வமுள்ள பலர் வழக்கமாக விதை சேகரித்து புதைத்தனர். விதை சேகரிக்கவும், விதை புதைக்கவும் சிறுவர்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றிருக்கிறார் திருப்பதி.

 

இப்படியே கடந்த 37 வருடங்களாக நடப்பட்ட பல லட்சம் பனை விதைகளில் இன்று சாரி சாரியாக பல ஆயிரம் பனைமரங்களாக உயர்ந்து நின்று பாண்டிக்குளம் ஏரி இன்று பனைமரக்காடாய் காட்சியளிக்கிறது. இதைப் பார்த்து தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அடுத்து வரும் சந்ததிக்காக 37 ஆண்டுகளாக எனது ஆலங்குடி தொகுதியில் பாண்டிக்குடியில் பனை வளர்த்து பெருமை சேர்த்த கிராம மக்களை மனதார பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

 

Villagers grow palms with a forum ... A record of growing tens of thousands of palm trees in 37 years!

 

பனைமரங்கள் வளர்ப்பிற்கு வித்தாய் இருந்த திருப்பதி கூறுகையில், 'மன்றங்கள் வைத்து எத்தனையோ நலப்பணிகளை சுற்றியுள்ள கிராம இளைஞர்கள் செய்தார்கள். நம்ம ஊரிலும் ஒரு மன்றம் உருவாக்குவோம் என்று சிலர் ஒன்று சேர்ந்து மகாகவி பாரதி மீதான பற்றால் அவர் பெயரிலேயே நற்பணி மன்றம் உருவாக்கி இந்த பனை விதைகளை ஊர் ஊராக தேடி அலைந்து சேகரித்து கொண்டு வந்து புதைத்தோம். சிறுவர்களை அழைத்து மிட்டாய் வாங்கி கொடுத்து  பனை விதைக்கச் செய்தேன். இப்போது எங்கள் தேவைக்கு மட்டுமின்றி ஆர்வமாக பனை விதை தேடும் பல கிராம இளைஞர்களுக்கும் நாங்கள் விதை கொடுக்கிறோம். இன்று வரை விதை புதைப்பதை நிறுத்தவில்லை நாங்கள்'' என்கிறார்.

 

மகாகவி பாரதி நற்பணி மன்றத்தினர் செய்த அந்த மகத்தான பணியை அவ்வூரில் இன்றைய இளைஞர்களும் சிறப்பாக செய்து வருகிறார்கள். சத்தமில்லாமல் சாதித்த பாண்டிக்குடி கிராம மக்களை பாராட்டுவோம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.