Skip to main content

காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்து தூர்வாரிய நெடுவாசல் கிராம மக்கள்

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
n

    

கல்லணை கால்வாய் ஈச்சன்விடுதி முக்கனிப் பாலத்தில் இருந்து குரும்பிவயல், செருவாவிடுதி, நெடுவாசல் வரை பாசனம் பெரும் வகையில் பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் வாய்க்கால் இருந்த இடமே தெரியாத அளவில் மறைந்துவிட்டது. அதனால் பாசனம் பெற்ற சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களும் தண்ணீர் இன்றி தரிசாக கிடந்துள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த வாய்க்காலை மறந்துவிட்டிருந்தனர். ஈச்சன்விடுதியில் தண்ணீரை தேக்கி பகிர்ந்து அனுப்பும் பாலத்திற்கு முன்பே இந்த வாய்க்கால் உள்ளதால் கல்லணை கால்வாயில் தண்ணீர் வந்தாலே நெடுவாசல் வாய்க்காலில் தண்ணீர் செல்லும். அந்த வாய்க்கால் தான் காணாமல் போது.

 

n


    இந்த நிலையில் நீர்நிலைகளை உயர்த்தினால் தான் நிலடித்தடி நீர்மட்டம் உயரும், ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் கிராம விவசாயிகள், இளைஞர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின்படி ஈச்சன்விடுதி முக்கனிப் பாலத்தில் இருந்து நெடுவாசல் கிராமத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவுள்ள குடிமாத்தன்குளம் என்கிற உடையான் குளம் வரை சுமார் 4.5 கி.மீ தூரத்திற்கு வாய்க்காலை தூர்வார முடிவெடுக்கப்பட்டது. அதற்காண நிதியை பாசன விவசாயிகள் மற்றும் தன்னார்வளர்கள், கிராம இளைஞர்கள் செய்வது என்ற முடிவின்படி கடந்த ஆகஸ்ட் 15 ந் தேதி தூர்வாரும் பணி தொடங்கியது. இதுவரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் முழுமையாக வாய்க்கால் சீரமைக்கபட உள்ளது. அதன் பிறகு நேரடியாகவும், குடிமாத்தான்குளம் பாசன பகுதியும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயனடையும்.

 
    மேலும் இந்த வாய்க்காலில் இருந்து நாடன் ஏரி, 140 ஏக்கர் பரப்பளவுள்ள நெடுவாக்குளம் ஆகிய குளங்களை தூர்வாரி அந்த ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதற்காண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த ஏரிகள் முழுமையாக நிரம்பினால் நிலத்தடிநீர்மட்டம் உயரும் என்கின்றனர் விசாயிகள்.


    அதே போல நெடுவாசல் கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் குளத்தை நெடுவாசல் இளைஞர் மன்றத்தினர் ரூ. 2 லட்சம் செல்வில் முழுமையாக தூர்வாரியுள்ளனர். அதே போல இன்னும் சில குளங்களையும் தூர்வாரி மராமத்து செய்யும் முயற்சியில் உள்ளனர். 


    இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது.. நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்திருந்தால் தான் அந்த ஊர் செழிக்கும். அதனால் தான் காணாமல் போய் இருந்த பாசன ஆற்றுவாய்க்காலை கண்டுபிடித்து பாசனதாரர்கள், தன்னார்வளர்கள் உதவியுடன் கிராம மக்கள் தூர்வாரி வருகிறோம். குளங்களையும் தூவாரியுள்ளோம். விரைவில் நெடுவாசலில் உள்ள அத்தனை குளம் ஏரிகளும் தூர்வாரப்பட்டு மழைக் காலத்தில் முழுமையாக தண்ணீரை சேமிக்கும் முயற்சியில் உள்ளோம். ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முயற்சி செய்தால் நீர்நிலையை உயர்த்தலாம் என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

"பயிர்கள் மழைநீரில் மூழ்கி, முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன" - பிஆர்.பாண்டியன்

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r. pandiyan about damages in delta districts

 

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் பி.ஆர்.பாண்டியன் இன்று  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஆய்வு செய்தபின் பேசும்போது, "தமிழ்நாட்டில் வானிலை மையம் கூட கணிக்க முடியாத வகையில் பருவம் தப்பிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூர் மாவட்டம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை  டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 15 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கி முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு இடுபொருள் செலவாக ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் பல கிராமங்கள் விடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

அரசு உடனடியாக அந்த நடைமுறையைக் கைவிட்டுவிட்டு டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்து உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.  காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல எடப்பாடி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பருவம் தப்பிய மழை பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பேரிடர் பகுதியாக அறிவித்து உரிய நிதியை வழங்க வேண்டும்" என்றார்.

 

 

Next Story

"நெடுவாசலில் போராட்ட நினைவுத் தூண் அமைக்க வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன்...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r.pandiyan reqquest to neduvasal people

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை ஒப்புதல் அளித்த நிலையில் 16 ந் தேதி காலை திட்டத்தைக் கைவிடக் கோரி அங்குள்ள கடைவீதியில் விவசாயிகள் 100 பேர் திரண்டு அடையாள ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதன் பிறகு இது தொடர் போராட்டமாக மாறியது. நாடியம்மன் கோயில் ஆலமரத்திடல் போராட்டக் களமானது. அதுவரை போராட்டம் என்றால் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தான் வழக்கம். ஆனால் நெடுவாசலில் அப்படியே தலைகீழாக மாறி, போராட்டம் என்பது கலைத் திருவிழா போல நடந்தது. 

 

ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் உரைவீச்சு, சினிமா நட்சத்திரங்கள் எனப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. போராட்டக்களத்திற்கு வந்தவர்களை இருகரம் கூப்பி வரவேற்று அவர்களுக்கு உணவளித்து உபசரித்தார்கள் போராட்டக் குழுவினர். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டம் செய்தாலும் இந்த நூற்றாண்டில் நடந்த முக்கியமான அமைதி வழி போராட்டங்களில் ஒன்றாக மாறியது. இந்த போராட்டத்தின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் நெடுவாசல் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இது பற்றி அவர் கூறும் போது, "நெடுவாசல் கிராமத்தில் வரலாறு காணாத போராட்டத்தைச் சுதந்திரத்திற்குப் பிறகு இப்பகுதி விவசாயிகள் காந்திய வழியில் நடத்தி உலகத்தின் பார்வையைத் திருப்பி உள்ளனர். எதிர்காலத்தில் இனி விவசாயிகள் வாழ்க்கையே போராட்டமாக மாறி வருகிறது. எனவே நெடுவாசல் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், எதிர்கால சந்ததியினருக்கு இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நெடுவாசல் கிராமத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் அமைப்பதாக  கிராம மக்கள் கூறியுள்ளனர்" என்றார்.