Skip to main content

கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்ட கிராம மக்கள்...!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

 

Villagers besiege village administration officer ...!

 

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ளது பிச்சனூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது  மனைவி  55 வயது குமுதம். இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஏழ்மை நிலையில் உள்ள அவர், அதே ஊரில் ஒரு குடிசையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அரசு வழங்கும் விதவை உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 2013ஆம் ஆண்டிலிருந்து பெற்று வருகிறார். 

 

இந்த பணம் மாதம்தோறும் இவரது வங்கி கணக்கில் வந்துவிடும் அதை எடுத்து தனது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி வந்தார் குமுதம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வங்கி கணக்கு எண் 7 டிஜிட்டல் எண்களில் இருந்து 10 டிஜிட்டல் என மாற்றியுள்ளனர் வங்கி அதிகாரிகள். அது சம்பந்தமாக இவருக்கு விவரம் தெரியாததால் வங்கிக்கு சென்று பார்க்கவில்லை. வங்கி ஊழியர்களிடம் கேட்க தெரியவில்லை. அப்போது முதல் இவருக்கு அரசு உதவித்தொகை மாதம்தோறும் இவரது வங்கிக் கணக்கிற்கு வந்துகொண்டே இருந்துள்ளது. 

 

ஆனால், குமுதம் அந்தப் பணம் தனக்கு வரவில்லை அரசு நிறுத்திவிட்டது என்று நினைத்துக்கொண்டு வங்கி பக்கமே செல்லவில்லை. சமீபத்தில் இவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது பேரன் மூர்த்தி என்பவர் துணையோடு சென்று தனக்கு பல ஆண்டுகளாக அரசு உதவித்தொகை வந்து சேரவில்லை என்று கேட்டுள்ளார். இவருக்கு உதவித் தொகை மாதம்தோறும் வங்கிக்கு அனுப்பப்பட்டு வருவதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கூறியுள்ளனர். இதையடுத்து வங்கிக்கு சென்று அந்த பணத்தை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது வங்கியில் நீண்ட நாட்களாக பணம் எடுக்காததால் நீங்கள் உங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலரிடம் அந்த ஊரில் வசிப்பதற்கான சான்று வாங்கி வந்து கொடுத்துவிட்டு பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். 

 

அதன்படி தனது பேரன் மூர்த்தியுடன் தங்கள் கிராம நிர்வாக அலுவலர் சிவஞானத்தை அணுகியுள்ளார். சிவஞானத்திடம் கடந்த 5 ஆண்டுகளாக விவரம் தெரியாமல் அரசு உதவித் தொகையை எடுக்காமல் விட்டுவிட்டேன் அதன் மொத்த தொகை 58 ஆயிரம் ரூபாய் அந்த பணத்தை எடுப்பதற்கு தாங்களிடம் பரிந்துரை சான்று வாங்கி வர வேண்டும் என வங்கியில் கேட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சிவஞானம் தங்கள் கணக்கில் சேர்ந்து உள்ள மொத்த பணத்தில் பாதியை எனக்குத் லஞ்சமாக தந்தால் பரிந்துரைக் கடிதம் தருவதாக கூறியுள்ளார். அவரிடம் குமுதம் தன்னுடைய ஏழ்மை நிலையை எடுத்துக்கூறிய பிறகும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கறார் செய்துள்ளார். அதற்குமுன் பணமாக 5,000 ரூபாய் கொடுத்து உள்ளனர் மீதி பத்தாயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்ததும் தருவதாக பேசி முடிக்கப்பட்டுள்ளது. 

 

அதன்படி சிவஞானம் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தை கொண்டு சென்று வங்கியில் கொடுத்துவிட்டு முழு பணத்தையும் பெற்றுள்ளார் குமுதம். அப்போது அங்கே வந்த கிராம நிர்வாக அலுவலர் சிவஞானம், வாங்கிய மொத்த பணத்தில் பாதி பணம் லஞ்சமாக கொடுத்தே ஆகவேண்டும் என்று பிரச்சனை செய்துள்ளார். இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. உடனே ஊர் பொதுமக்கள் திரண்டு சென்று கிராம நிர்வாக அலுவலர் சிவஞானத்தை அவரது அலுவலகத்தினுள்ளே வைத்து முற்றுகையிட்டுள்ளனர். இந்த தகவல் ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தெரியவந்தது. 

 

அதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். அதேபோல் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலைவாணன், துணை வட்டாட்சியர் ஜானகிராமன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோரும் அங்கு சென்றுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சிவஞானம் விதவைப் பெண் குமுதத்திடம் லஞ்சம் கேட்டது  குறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வட்டாட்சியர் கலைவாணன், கிராம நிர்வாக அலுவலர் லஞ்சமாக பணம் கேட்டது உண்மை என எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலர் சிவஞானத்தின் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக உயர் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை அவர்களுக்கு புகார் அனுப்பப்படும். அவர் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

 

ஏழை விதவைப் பெண்ணிடம் ஈவிரக்கமின்றி ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் சிவஞானத்தின் செயலை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.