Village custom that still unchanges today

தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசமான பழக்கவழக்கங்கள் பழங்காலந் தொட்டு இன்றளவும் மாறாமல் நடைமுறையில் இருக்கும். இந்தப் பழக்கங்கள் இறப்பிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு எனச் சுற்றியுள்ள சுமார் 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒருவர் இறந்தால், துக்கம் விசாரிக்கச் செல்லும் உறவுக்காரஆண்கள் மேல்சட்டை இல்லாமல் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு, கைகளைத் தழுவி, உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கெடுப்போம் என்பதை மெய்பித்துச் செல்வார்கள். இறப்பில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக தான் சட்டை கழற்றிச் செல்லும் பழக்கம் இன்றும் உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

அதேபோல, தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பாங்கராங்கொல்லை கிராமத்தில் யாராவது இறந்தால் அந்த கிராம மக்களில் ஒருவர் மாட்டு வண்டியை கிராமத்திற்குள் ஓட்டிச் செல்ல, அந்த மாட்டு வண்டியில் வரட்டிகளையும், ரூ, 5, 10 பணத்தையும் அந்த வண்டியில் வைத்து அனுப்புகிறார்கள். கிராம மக்கள் கொடுத்தசாணவரட்டியில் இறந்தவர், சடலம் எரிக்கப்படுகிறது. ஈமச்சடங்கு செலவுகளும் கிராம மக்கள் கொடுத்த பணத்திலேயே செய்யப்படுகிறது. இது குறித்து அந்த கிராம இளைஞர்கள் கூறும் போது,சுப நிகழ்ச்சிகள் என்றால் முன்னதாகத் திட்டமிட்டுச் செய்வதால், அதற்கான பணம் திட்டமிட்டுச் செலவிடப்படுகிறது. ஆனால், இறப்பு என்பது எதிர்பாராமல் நடப்பது. அவர்களிடம் ஈமச் செலவுக்குப் பணம் இருப்பது சந்தேகம் தான். அதனால்தான் கிராமமே சேர்ந்து அந்தச் செலவை செய்கிறோம் என்றனர்.

Advertisment

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள கிராமங்களில், மருத்துவமனையில் ஒருவர் இறந்தால் அவரது உடலை ஊருக்குள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், சமூக ஆர்வலரான வீரனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மணிமாறன் பட்டுக்கோட்டையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், பிராணவாயுடன் மணிமாறனைசொந்த ஊருக்குக் கொண்டு வந்தனர். ஊருக்கு வந்து சிறிது நேரத்தில் அவது உயிர் பிரிந்தது.

 Village custom that still unchanges today

இது குறித்து அப்பகுதி பெரியவர்கள் கூறும் போது,ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குப் போய் அங்கு இறந்த பிறகு, பல்வேறு கிருமித் தொற்றுகளுடன், சொந்த ஊருக்குக் கொண்டுவரும் போது, அதன் மூலம் சிறுவர்கள், முதியவர்களுக்குக் கிருமி தொற்றிவிடக் கூடாது என்பதற்காகத் தான் வீட்டுக்குக் கொண்டு வராமல், நேரடியாகச் சுடுகாட்டுக்குக் கொண்டு போகும்பழக்கத்தை, எங்கள் முன்னோர்கள் செய்துள்ளனர். அந்தப்பழக்கம் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. அதே போலத் திருமணம் ஆகாதவர்கள் இறந்தால், பந்தல் அமைப்பதில்லை. கொட்டும்(பறை)அடிக்கமாட்டோம், வெடி வெடிப்பதில்லை. இந்தப் பழக்கங்கள் இன்றும் தொடர்கிறது என்றனர்.

தமிழர்களின் சடங்குகளை மேலோட்டமாகப் பார்த்தால் மூடநம்பிக்கைகளைப் போல தெரியலாம். ஆனால், அர்த்தமுள்ளவை என்பது ஆராய்ந்தால்தான் தெரியும்.