Skip to main content

ஒரு பெண்ணுக்காக ஊர் திருவிழாவையே மாற்றிய கிராமம்!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

The village that changed the town festival for a girl!

 

தமிழகத்தின் வட மாவட்டங்களில் தை மாதம் அறுவடை காலங்கள் முடிந்து அதன் பிறகு மாசி மாதம் முதல் ஆவணி மாதம் வரை கிராமங்களில் தங்கள் கிராமத்தை காக்கும் அம்மன் தெய்வங்களுக்கு காப்பு கட்டி ஊர் ஒற்றுமையுடன் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக கிராமங்களில் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த கோவில் திருவிழாக்கள் தற்போது களைகட்டி வருகின்றன. அதிலும் ஒரு கிராமத்தில் திட்டமிட்டபடி நடத்தவேண்டிய தீமிதி திருவிழாவை முன்கூட்டியே நடத்தியுள்ளனர். 

 

ஏன் என்று விசாரித்தபோது மிகவும் சுவாரசியமான காரணம் இருந்தது. 

 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள நக்கம்பாடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சமீபத்தில் காப்பு கட்டி 18 நாள் மகாபாரதம் நடத்தி பதினெட்டாம் நாள் தீமிதி திருவிழா நடத்துவதற்கு திட்டமிட்டனர். அதன்படி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. பெரும்பான்மை கிராமங்களில் கோவில்களின் திருவிழாவின் ஆரம்பத்தில் காப்பு கட்டும் வைபவம் நடக்கும் அதன்பிறகு திருவிழா முடிந்து காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி முடியும் வரை ஊரில் உள்ள அனைவரும் ஊரிலேயே வசிப்பார்கள். பகல் நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர்களுக்கு செல்பவர்கள் கூட இரவு எங்கும் தங்காமல் ஊருக்கு வந்து விடுவார்கள். காப்பு கட்டிய பிறகு சம்பந்தப்பட்ட ஊர்க்காரர்கள் வெளியூர் சென்று இரவு தங்குவது தெய்வ குற்றம் என்றும் அதனால் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த இரவுக்கு முன் ஊருக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.

 

இப்படிப்பட்ட நிலையில், நக்கம்பாடி கிராமத்தில் கோவில் தீமிதி திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (8ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, இன்று (6ஆம் தேதி) வெளியூரில் திருமணம் நடத்த திட்டமிட்டு, அதற்காக முன்கூட்டியே திருமண நிச்சயதார்த்தமும் நடத்தி இருந்தனர். 

 

வெளியூரில் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் முதல் நாளே மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். கோவில் திருவிழா காப்பு கழட்டுமுன் எப்படி மணப்பெண்ணை அனுப்புவது என்ற சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி அமர்ந்து பேசினர். அதன்படி தங்கள் கிராமத்துப் பெண் வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ வேண்டும் அதற்கு கோயில் திருவிழா ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே, திருமண தேதியை மாற்றி வைக்க முடியாத காரணத்தால், 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடத்தவேண்டிய தீமிதி திருவிழாவை முன்கூட்டியே நடத்தி முடித்து காப்பு அவிழ்ப்பது என முடிவு செய்தனர். 

 

அதன்படி  காப்பு கட்டி 14-வது நாளான நேற்று (5ஆம் தேதி) தீமிதி திருவிழா நடத்தி சாமி காப்பு அவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு திட்டமிட்டபடி அந்தப் பெண் அழைப்பு நடைபெற்று இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. 

 

இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்கள், ‘எந்த தெய்வமும் ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் காவல் தெய்வமாக எங்களை காத்து வருகிறார்கள். அதனால் திரெளபதி அம்மனுக்கு முன்கூட்டியே தீமிதி திருவிழா நடத்தி ஒரு பெண்ணின் திருமணம் தடைபடாமல் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பட்டது. எங்கள் கிராம மக்கள் அனைவருக்கும் சந்தோஷம்” என்கிறார்கள். மேலும், இந்த சம்பவம் நக்கம்பாடி கிராம மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது என்றார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.