Skip to main content

மூதாட்டியிடம் லஞ்சம் கேட்ட விஏஓ; கையும் களவுமாகத் தூக்கிய போலீஸ்   

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Village administration officer arrested for taking bribe in Cuddalore

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ளது முருகன்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் மணிமொழி. இவர் தனக்கு அரசு மூலம் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதற்கும் தன் குடும்பத்தினருக்கு வாரிசு சான்றிதழ் கேட்டும் இணைய வழி மூலம் கிராம நிர்வாக அலுவலருக்கு முறைப்படி மனு செய்துள்ளார். இந்த மனு முருகன்குடி, துறையூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வரும் ஸ்ரீமுஷ்னம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவருக்குச் சென்றது. அவர் மணிமொழியின் மனுக்களை அவருக்கு மேல் உள்ள வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்குச் செல்ல முடியாமல் மனுவை முடக்கி வைத்துள்ளார் என்று தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மனுதாரர் மணிமொழி, கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமாரை நேரில் சந்தித்து தனது மனுக்களை உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளார். அப்போது சம்பத்குமார் அவரது மனுக்களை மேலதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமானால் ரூ. 4500 லஞ்சமாகப் பணம் தர வேண்டும் அப்போதுதான் உங்கள் மனுவை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வேன் இல்லையென்றால் கிடப்பில் போடுவேன் என்று பேரம் பேசி உள்ளார். 

“நானே அரசிடமிருந்து முதியோர் உதவித்தொகை கேட்டு மனு செய்துள்ளேன். என்னிடம் போய் நீங்கள் லஞ்சம் கேட்கலாமா..” என்று சம்பத்குமாரிடம்  மணிமொழி கேட்டுள்ளார். அப்போதும் கிராம நிர்வாக அலுவலர், “பணம் கொடுத்தால் வேலை நடக்கும்; இல்லையேல் இடத்தை காலி செய்..” என்று கூறியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த மணிமொழி இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புகாரை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், உண்மைத் தன்மையின் அடிப்படையில் மணிமொழியிடம் ரசாயனம் தடவிய ரூ. 4,500 பணத்தை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமாரிடம் லஞ்சமாக கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி மணிமொழி சம்பத்குமாரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்க, சம்பத்குமார் வாங்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலரைச் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து சம்பத்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.