Skip to main content

காந்தி மார்க்கெட் வழக்கு... தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் போராட்டம்! - விக்கிரம ராஜா அறிவிப்பு!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

Vikramaraja press meet

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவராக விக்கிரமராஜா மற்றும் மாநிலப் பொதுச் செயலாளராக கோவிந்தராஜூலு ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “கரோனா கால கட்டத்தில், வியாபாரிகள் தமிழக அரசிற்குப் பெருமளவிற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். காந்தி மார்க்கெட் விவகாரத்தில், தனி நபர் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருப்பதால், காந்தி மார்கெட் மீண்டும் திறக்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு தலையிட்டு, வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்து வியாபாரிகளுக்குச் சாதகமான தீர்ப்பு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்.

 

காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி, இன்று மாலை முதல் திருச்சியில் உள்ள காய்கறி பழ மார்க்கெட்டுகள், முழுமையாக அடைக்கப்பட்டு, போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் கடையடைப்பில் ஈடுபட, தமிழக வியாபாரிகள் தயார் நிலையில் உள்ளதைக் கருத்தில்கொண்டு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா காலத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டும். 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில், கடைகளை அப்புறப்படுத்தக்கூடாது. அப்படி அப்புறப்படுத்தினால், திட்டப்பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் அதே பகுதிகளில் கடைகளை ஒதுக்க வேண்டும்.

காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில், நீதிமன்றத் தீர்ப்பு வியாபாரிகளுக்குச் சாதகமாக வராத பட்சத்தில் தமிழகம் முழுதும் வியாபாரிகள் போராட்டம் நடத்துவோம். கடையடைப்பு போராட்டத்தால், வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும்தான் பாதிப்பு. எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்ததற்கு வரவேற்பு அளிப்பது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காலக்கெடு முடிந்த சுங்கச் சாவடிகளை அகற்றிட வேண்டும், வேளாண் விளை பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாநாட்டை தவிர்த்து நலதிட்ட உதவிகள் செய்த வணிக சங்க பேரமைப்பினர்...!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021
Corona spread; The trade union bargainers who made welfare assistance apart from the conference ...!

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை முன்னிட்டு மே 5ஆம் தேதி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை போன்ற பெரும் நகரங்களில் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்  ஐந்தாம் தேதி வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு நடத்தி, தங்களது ஒற்றுமையை நிலைநாட்டி வந்தனர். தற்போது கரோனா பரவலின் இரண்டாவது அலை அனைவரையும் கடுமையாகப் பாதித்துள்ளதால், இந்த ஆண்டுக்கான இம்மாநாடு நடத்துவதை ரத்து செய்துள்ள வணிகர் சங்க பேரமைப்பு, அதற்கு பதிலாக சென்னையில் உள்ள எளிய வணிகர்களுக்கும், ஏழைக் குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும், வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள  முகக்கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றையும் வழங்கினர்.

 

மேலும், தமிழகம் முழுவதும்  வணிகர்கள் இதுபோன்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என இவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி திட்டக்குடி நகரில் உள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி தங்கராசு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 
 

 

 

Next Story

"கரோனா ஆய்வு என்ற பெயரில் வணிக நிறுவனங்களில் திடீர் ரெய்டு செய்து அபதாரம் விதிப்பதற்கு தமிழக அரசு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" -விக்கிரமராஜா

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

Vickramarajah press meet erode

 

 

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அதன் தலைவர் விக்கிரமராஜா ஈரோடு வந்திருந்தார். கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், சத்தியமங்கலம் மற்றும் ஈரோட்டில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வருகிற 8ஆம் தேதி சென்னையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சீனப்பட்டாசுகள் வரவை தடுக்க ஆலோசனை கூட்டம் வைத்துள்ளோம். சீன பட்டாசுகளின் வரவை அரசு தடுக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் என மக்கள் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தும் பொருட்களை மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்கள் பட்டியிலிருந்து நீக்கி உள்ளார்கள். 


இதனால் இந்தப் பொருட்களின் விலை உயரக்கூடிய அதிக வாய்ப்பு உண்டு. தேவைப்பட்டால் இந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன் நாங்கள் வியாபாரிகளும் இணைந்து போராடுவோம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதியாக போராட்டத்தில் இறங்கும். அதுமட்டுமில்லாமல் பல ஆயிரக்கணக்கான வணிகர்களை திரட்டி டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டமும் மாநாடும் நடத்த உள்ளோம்.

 

மேலும் இப்போது பண்டிகை காலம். தீபாவளி விரைவில் வர உள்ளது இந்த பண்டிகையையொட்டி மக்கள் புத்தாடைகள் வாங்க, பொருள்கள் வாங்க கடைகளுக்கு வருவது வழக்கம் இதில் கரோனா ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் திடீர் ரெய்டு செய்து அங்கு அபதாரம் விதிப்பது என்பதை தமிழக அரசு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." என்றார்.