அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற பிரச்சணை பெரும் பூதமாக கிளம்பி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களே பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில்தான் சத்தமில்லாமல் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை இரா.சின்னத்தம்பி புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அக்கட்சியினர் மத்தியில் பரவத் தொடங்கியதும் பரபரப்பு ஏற்பட்டது.

vijayabaskar dad chinnathambi

அவர் வெற்றி பெற்ற விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையைவிட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சுமார் 62 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றார். ஆனால் அதேநேரத்தில் தன் செல்வாக்கை பயன்படுத்தி தன் தந்தையை போட்டியின்றி மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் ஆக்கிவிட்டார் என்கிறார்கள் அதிமுகவினர்.

Advertisment

கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப மனுக்கள் வாங்கியபோது, தம்பிதுரைக்கு எதிராக விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் விருப்பமனு கொடுத்தார். அந்த நிலையிலேயே பிப்ரவரி 23 ந் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பதவிக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

vijayabaskar dad chinnathambi

21 இயக்குநர்களுக்கு 32 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தாலும் 11 பேர் வாபஸ் பெற்றதால் 21 இயக்குநர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால் கூட்டுறவு வங்கி மாவட்டத் தலைவர் தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்தநிலையில்தான் இன்று ஜூன் 10ந் தேதி திங்கட்கிழமை சத்தமில்லாமல் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை இரா.சின்னத்தம்பி மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அதேபோல துணைத்தலைவர் பதவிக்கு உசிலங்குளம் கே.ஆர்.கணேசன் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வேறு யாரும் போட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக பொறுப்பு எற்கிறார். இந்த தகவல் அறிந்த அமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வினர் 12 ந்தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க. கட்சி கூட்டத்தில் இதுபற்றி எல்லாம் விவாதம் செய்வோம் என்கின்றனர் அதிமுகவினர்.