
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் பாராட்டி நிதியுதவி அளித்து வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 முறை மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அதன்படி இந்த ஆண்டும் முதற்கட்டமாக 80 தொகுதிகளைச் சேர்ந்த முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 30.05.2025 அன்று சந்தித்துப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (04/06/2025) இரண்டாம் கட்டமாக மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து கல்வி விருது வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விஜய்யிடம் பாராட்டைப் பெற்ற பிறகு மைக்கில் பேசியபோது, 'வணக்கம் நான் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்திருக்கிறேன். என்னோட பேரு மோனிகா. இந்த விருதை விஜய்யிடம் இருந்து வாங்குவதில் எனக்கு ரொம்ப பெருமை. இது என்னுடைய ரொம்ப நாள் கனவு. அது இன்று நிறைவேறி விட்டது என்றவுடன் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எத்தனையோ மாணவர்கள் நல்ல மதிப்பெண் வாங்கி விஜய்யை பார்க்காமல் இருக்கிறார்கள். அந்த வாய்ப்பு நிறைய பேருக்கு கிடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் 2026 முதல்வராக வந்து அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதை நான் ஒரு கோரிக்கையாக கேட்கிறேன். இவர்தான் 2026 ல் சிஎம். என்னுடைய மனசிலிருந்து சொல்கிறேன். போன மீட்டிங்கில் நீட் பற்றி சொன்னார். அது எங்களுக்கு நல்ல மோட்டிவேஷனாக இருந்தது' என தெரிவித்தார். அப்பொழுது திடீரென மைக்கை வாங்கிய விஜய், 'கண்டிப்பாக நான் சொல்லி கூட்டி வரல' என்றார்.