Vijay praises and rewards 'Undu Boarding School' student Rajeswari

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் உண்டு உறைவிட பள்ளியில் கல்வி பெற்று ஐஐடிக்கு தேர்வாகியுள்ள மாணவி ராஜேஸ்வரிக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி அளித்து பாராட்டியுள்ளார்.

நடிகரும் திமுக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை அழைத்து பாராட்டும் நிகழ்வானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மூன்று கட்டங்களாக கல்விவிருது விழா நடைபெற்ற நிலையில் நான்காவது கட்டமாக இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதி அருகே உள்ள கருமந்துறை கிராமத்தை சேர்ந்த ஆண்டி-கவிதா தம்பதியின் ராஜேஸ்வரிக்கு விஜய் விஜய் 2 லட்சம் ரூபாய் நிதியளித்து பாராட்டினார்.

Advertisment

ஆண்டி - கவிதா தம்பதிக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி மூன்று மகள்களும், ஸ்ரீ கணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். டெய்லர் வேலை பார்த்து வந்த ஆண்டி தனது பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். அதற்காக கடுமையாக உழைத்து வந்திருக்கிறார். ஆனால் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக ஆண்டி உயிரிழக்க பட்டதாரியான அவரது மகன் ஸ்ரீ கணேஷ் தந்தை தொழிலான டெய்லர் வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார்.

கருமந்துறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இளைய மகள் ராஜேஸ்வரி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 521 மதிப்பெண்களும் எடுத்து அசத்தியுள்ளார். பின்பு படிப்பை வைத்து வாழ்கையில் சாதித்து அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிய ராஜேஸ்வரிக்கு பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதற்காக கடின உழைப்பைச் சிந்திய ராஜேஸ்வரி பெருந்துறையில் உள்ள அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து ஜே.இ.இ தேர்வு எழுதியுள்ளார். அதில் அகில இந்திய அளவில் 417 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ராஜேஸ்வரிக்கு சென்னை ஐஐடியில் பயிலுவதற்கு இடம் கிடைத்துள்ளது.

இந்த தொடர் உழைப்பின் பலனாக தமிழகத்தில் பழங்குடியின சமூகத்தில் இருந்து சென்னை ஐஐடிக்கு படிக்கச் செல்லும் முதல் பெண் என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.