சீர்காழி அருகே பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பால், முட்டை மற்றும் பிரட்ஆகியவற்றை வழங்கும் திட்டத்தைத்தொடங்கி வைத்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

Advertisment

நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாள் விழா தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்களாலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்றாலும், அன்று மட்டுமின்றி ஆண்டு முழுவதும் விஜய் பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாட இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத்தொடர்ந்து வழங்கி வருகின்றனர். முன்னதாக கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் ஏராளமான உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வந்தனர். மேலும், ஆதரவற்றோர் இல்லங்கள், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி, அரசு மருத்துவமனைகளில் பிரசவமாகும் தாய் மற்றும் குழந்தையை இலவசமாக வீடுகளுக்கு அழைத்துச்செல்ல வாகன வசதி எனப் பல உதவிகளைச் செய்தனர்.

Advertisment

இந்நிலையில், சீர்காழி தொண்டரணி சார்பாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் முதியோருக்கு வாரம் ஒரு முறை பால், முட்டை மற்றும் ரொட்டி ஆகியவற்றை விலையில்லாமல் வழங்கும் திட்டத்தை சீர்காழி அருகே காளிகாவல்புரம், தெற்கிருப்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் ஏராளமான மாணவ மாணவிகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தனர்.