Vijay congratulates Thiruma and Seeman

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. 12 மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை எடுத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகள் பெற்றிருந்ததும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் 'விவசாயி சின்னம்' பறிக்கப்பட்டு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Vijay congratulates Thiruma and Seeman

Advertisment

அதேபோல் இரண்டு தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று 2 சதவிகிதத்திற்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளதால் விசிக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப்பெற்றுள்ளது. கட்சி ஆரம்பித்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் அரசியல் அங்கீகாரம் பெற்றதற்கு விசிகவின் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.