Skip to main content

''ஒன்னுக்கு 5 கார் இருந்தும் சாருங்க முன்வரல...'' - மீட்பில் மெத்தனம் காட்டியதாக குற்றசாட்டு!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

The video of the student  in nelllai school incident

 

நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (17.12.2021) மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்களைப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டது. சுதீஸ் - 6ஆம் வகுப்பு 'சி' பிரிவு, விஷ்வரஞ்சன் - 8ஆம் வகுப்பு 'ஏ' பிரிவு, அன்பழகன் - 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு என மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நிவாரணமும் அறிவித்துள்ளார். “இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.

 

The video of the student  in nelllai school incident

 

இந்நிலையில், இந்த விபத்தில் மாணவர்களை மீட்பதில் ஆசிரியர்கள் மெத்தனம் காட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு தங்களது காரில் ஏற்றிச்செல்ல மறுத்ததாகவும், ஆன்புலன்ஸ் வரும்வரை காத்திருந்ததாகவும் அப்பள்ளி மாணவன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தனது உறவினர்களிடம் நடந்த விபத்து குறித்து விவரிக்கும் மாணவன், ''சுற்றியிருக்கும் எல்லா சார்கிட்டையும் கார் இருக்கு. கொண்டு போயிருந்தா காப்பாத்தியிருக்கலாம். ஆம்புலன்ஸ் வரட்டும்... ஆம்புலன்ஸ் வரட்டும்... என அப்படியே நிப்பாட்டி அப்படியே போயிருச்சு... என்னைச் சுத்தி 20 சார் நிக்குறாங்க.. 20 சார்கிட்டயும் 20 கார் இருக்கு... ஹெச்.எம் கிட்ட கார் இருக்கு, ஏ.ஹெச்.எம் கிட்ட கார் இருக்கு... ஒன்னுக்கு 5 கார் இருந்தும் காப்பாத்தல'' எனப் பேசியுள்ளார்.

 

The video of the student  in nelllai school incident

 

அதேபோல் கழிப்பறை கட்டடம் குறித்து புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி மாணவர்கள், ''ஹெச்.எம். ஒழிக'' என கோஷங்களை எழுப்பியபடி சாலையில் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.