Skip to main content

“நாங்க இந்து சேனா... எங்களுக்கே பணமில்லையா” - மிரட்டும் கும்பல்

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

video of a gang threatening the college administration is going viral

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ளது வடசேரி ஊராட்சி. இந்த பகுதியில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பேராயத்தால் நிர்வகிக்கப்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கல்லூரிக்கு மாருதி 800 காரில் மூன்று நபர்கள் வந்தனர். அவர்கள் நேராக கல்லூரி அலுவலகத்திற்குள் புகுந்து, விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக நன்கொடை என்ற பெயரில் டொனேஷனாக பணம் கேட்டுள்ளனர்.

 

அப்போது, இதைக் கேட்ட கல்லூரி நிர்வாகத்தினர், “முதல்ல நீங்க யாரு. நாங்க எதுக்கு உங்களுக்கு பணம் கொடுக்கணும்” எனக் கேள்வி எழுப்பினர். அதே நேரம், இதே பெயரில் நன்கொடை கேட்டு பலர் வருவதால் நன்கொடை வழங்க கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். இதனிடையே, கல்லூரிக்குள் வந்தவர்கள், “நாங்கள் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவங்க. மேற்கு மாவட்டத்துல இருந்து வரோம். நரேந்திர மோடி கட்சிக்காரங்க. எங்களுக்கே பணம் இல்லையா? என மிரட்டல் தொனியில் பேசினர்.

 

இதையடுத்து பேசிய கல்லூரி நிர்வாகத்தினர், “நீங்க மேற்கு மாவட்டம்னா அங்க போயிட்டு கேளுங்க. இங்க ஏன் வரீங்க. இது கிழக்கு மாவட்டம். எதுக்கு இந்த மாதிரிலாம் பண்றீங்க” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். ஒருகட்டத்தில், பதற்றமடைந்த இந்து சேனா அமைப்பினர், “எங்களை நீங்க வாங்கன்னு கூப்பிடாதீங்க. ஜீ... னு கூப்பிடுங்க. நீங்க எதுக்கு கணபதி பத்தி பேசுறீங்க. நாங்க விநாயகர் சதுர்த்திக்கு, அன்னதானத்துக்கு பைசா வாங்குவோம். இதெல்லாம் தப்பா சார்” என்று அப்படியே பிளேட்டை மாற்றினார்.

 

அதுமட்டுமின்றி, கல்லூரி நிர்வாகத்தினர் மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுக்கவும் முயற்சித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதங்கள் எழுந்தது. இதையடுத்து, இந்து சேனா அமைப்பினர் எவ்வளவோ கேட்டு பார்த்தும் கல்லூரி நிர்வாகத்தினர் நன்கொடை வழங்க மறுத்ததால், அந்த மூன்று பேர் அங்கிருந்து நழுவ பார்த்தனர். ஆனால், அவர்களை பின்தொடர்ந்த கல்லூரி நிர்வாகத்தினர், நீங்கள் யார் என்று கேட்டதற்கு, “நாங்க இந்து சேனா.. இந்து சேனா.. நரேந்திர மோடி.. நரேந்திர மோடி” என கத்திப் பேசியவாறு மூவரும் காரில் ஏறி அங்கிருந்து வெளியேறினர்.

 

இந்நிலையில், நன்கொடை கேட்டு மிரட்டுவதாக, இந்து சேனா அமைப்பினர் மீது கல்லூரி நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் இந்து சேனா நிர்வாகி பிரதீப்குமார், பிரதீஷ், மூர்த்தி ஆகிய 3 மூன்று பேரையும் வலைவீசி தேடி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவர்களைக் கைது செய்தனர்.  இதையடுத்து, அந்த மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

இதற்கிடையில், பிரதீஷை நாகர்கோவில் சப் ஜெயிலில் அடைப்பதற்காக போலீசார் கொண்டு சென்றார்கள். அப்போது, அவர் சிறைச்சாலை முன்பு அமர்ந்துகொண்டு, “அய்யோ அம்மா, என்னை விட்டுடுங்க..” என்று குழந்தை போல் கதறி கதறி அழுது கூச்சலிட்டார். அதன்பிறகு, அவரை போலீசார் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். தற்போது, கிறிஸ்தவ கல்லூரிக்குள் புகுந்து பணம் கேட்டு மிரட்டிய இந்து சேனா அமைப்பினரின் வீடியோ பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு; உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 husband lost their life in grief over the passed away of his wife

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வசிக்கும் ஜெனிஷ்(25) அப்பகுதியைச் சேர்ந்த ஜெனிஷா(20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 11ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஜெனிஷ் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். ஜெனிஷா திருநந்திக்கரையில் உள்ள ஒரு தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜெனிஷ் மற்றும் ஜெனிஷா இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே ஜெனிஷுக்கு குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. இதனை மனைவி ஜெனிஷா கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த ஜெனிஷா கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் விஷம் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கடந்த சில நாட்களாக ஜெனிஷ் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தினமும் அதிகளவில் மது அருந்தி உள்ளார்.

இந்த நிலையில் ஜெனிஷ் கடந்த 7 ஆம் தேதி தனது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்ரி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பறிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஜெனிஷ் உயிரிழந்தது குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி இறந்த துக்கத்தில், உயிரை மாய்த்துக் கொண்ட கணவனின் செயல் குலசேகரப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.