
ஐடியில் வேலை பார்ப்பதாக ஊரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் சொல்லிவிட்டு சென்னைக்கு வந்த இளம்பெண் தகாத செயல்களில் ஈடுபட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை திருவொற்றியூர் சத்துமா நகர் பகுதியில் வசித்து வந்தவர் நித்யா(26). அம்பத்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் கடந்த ஆறு வருடமாக தான் வேலை செய்து வருவதாக பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லி வந்துள்ளார். நித்யாவிற்கு கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. பாலமுருகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யாவின் பெற்றோர் அவரை பார்ப்பதற்காக கொடுங்கையூர் வீட்டுக்கு வருவதாக இருந்தனர். இதை அறிந்து கொண்ட நித்யா, பெற்றோர்கள் வருவதால் 'நீ வீட்டில் இருக்க வேண்டாம்' என பாலமுருகனை வெளியே அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அன்று மாலையே பாலமுருகன் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது நித்யா கீழே விழுந்து மயங்கி கிடந்தார். உடனடியாக பாலமுருகன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலளித்த நிலையில் அங்கு வந்தவர்கள் நித்யாவை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நித்யாவின் பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நித்யா லிவ்விங் டுகெதர் வாழ்வில் இருந்தது தங்களுக்கு தெரியாது என்றும், ஆனால் ஒரு நபருடன் அவர் பழகி வருகிறார் என்பது மட்டும் எங்களுக்கு தெரியும். ஒருவேளை பாலமுருகன் என் மகளை கொன்றுவிட்டு அவருடைய நகையை எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் என தெரிவித்தனர்.

கொலை செய்த மருத்துவர் சந்தோஷ்குமார் / லிவிங் டு கெதரில் இருந்த பாலமுருகன்
பாலமுருகனிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது நித்யாவின் பெற்றோர்கள் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அடுத்தகட்டமாக நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தனர். ஆய்வில் கடைசியாக நித்யா மருத்துவர் ஒருவரிடம் பேசியது தெரியவந்தது. ஆலந்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற அந்த நபரை கொடுங்கையூர் போலீசார் விசாரித்த பொழுது பல அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது.
நித்யா ஐடியில் வேலை செய்வதாக கூறி எல்லோரையும் ஏமாற்றி விட்டு வீடியோ காலில் தோன்றி ஆபாச செயல்களில் ஈடுபடுவதற்கு பணம் வாங்கி வந்தது தெரியவந்தது. ஏற்கனவே அறிமுகமாகி இருந்த மருத்துவர் சந்தோஷ்குமாரை சம்பவத்தன்று வீடியோ காலில் தொடர்பு கொண்ட நித்யா ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு முன்னரே மருத்துவர் சந்தோஷ்குமார் நித்யாவிடம் 5 லட்சம் ரூபாய் இழந்ததை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்த ஆத்திரத்தில் நித்யாவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று நித்யாவின் வீட்டுக்கு மருத்துவர் சந்தோஷ்குமார் சென்ற பொழுது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் மதுவில் அளவுக்கதிகமான தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து மயங்க செய்த சந்தோஷ்குமார், தலையணையை வைத்து நித்யாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மருத்துவர் சந்தோஷ்குமார் அவருடைய நண்பர் முஜுபூர் பாஷா என்று ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.