தற்போதைய கல்வி முறைகளில் பெரிய அளவிலான மாற்றம் தேவை எனப் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் என்று கூறி, இன்று சட்டப்பேரவையில் புதிய மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது தமிழக அரசு. இந்த மசோதாவுக்கு பாஜக, அதிமுக எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்த சம்பவங்கள் ஒருபுறம் நடைபெற்று வந்த நிலையில், இன்று ஊட்டியில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநரின் பேச்சு பரபரப்பைக் கூட்டியுள்ளது.
அதில் பேசிய அவர், " நடப்பு கல்வி முறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவைப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகங்கள் எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஊக்கமளித்து வேலை வாய்ப்பை பெருக்கக்கூடிய கல்வி முறையைத் துணை வேந்தர்கள் உருவாக்க வேண்டும். 2014ம் ஆண்டு பின்னர் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்திற்கு நம்முடைய பங்கும் இருக்க வேண்டும்" என்றார். தமிழக அரசு வேந்தர்களை ஆளுநர் நியமிக்கத் தடை போடும் விதமாக மசோதா கொண்டுவந்துள்ள நிலையில் ஆளுநர், பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் பங்கேற்கும் மாநாட்டைக் கூட்டி, கல்வி முறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவைப்படுகிறது என உரையாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.