Skip to main content

”ஒரே தேர்தல் என்று சொல்லுவது ஏமாற்றுகின்ற வேலை” - புகழேந்தி சாடல்!

Published on 19/02/2022 | Edited on 19/02/2022

 

"Very happy to have done my democratic duty" - pugazhendi interview!

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அ.தி.மு.க.வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ஓசூரில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.  

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புகழேந்தி, "ஜனநாயக கடமையை ஆற்றியதில் மிக்க மகிழ்ச்சி. யாருக்கு வாக்களித்தோம் என்று சொல்லக் கூடாது. எனது வாக்குகளைப் பொறுத்தவரை அது மதவாத சக்திகளுக்கு எதிராக அமைந்திருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டிவிட்டேன். ஒரு நல்லாட்சிக்கு உட்பட்டது தான், நகர்ப்புற உள்ளாட்சி என்பது எல்லோரும் அறிந்தது. சாதாரண மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொன்னார்கள். நான் சொன்னேன், ஆம், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஜெயில். கொள்ளையடித்தவர்களும், சுரண்டியவர்களும், மக்கள் எதிராக நடந்து கொண்டவர்களும் ஒரே சிறைக்குப் போகச் சட்டத்தில் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை. ஒரே தேர்தல் என்று சொல்லுவது ஏமாற்றுகின்ற வேலை. 

 

தற்போது ஐந்து மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் எப்படித் தேர்தல் நடைபெறும்? ஓசூரில் டி.வி.எஸ்., கேட்டர்பில்லர், அசோக் லைலாண்ட்  போன்ற நிறுவனங்கள் மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. மற்றபடி, எனக்கு தெரிந்த வரை இங்கு பெரிய வளர்ச்சி ஏதுமில்லை. 

 

அமையவிருக்கின்ற நகராட்சியிலாவது ஓசூர் மக்களுக்குத் தேவையான வசதிகளையெல்லாம் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் பொறுத்திருந்து அதைப் பார்க்கலாம். என்னைப் பொறுத்த வரை, இந்த தேர்தல் ஆளுங்கட்சிக்குத் தான் சாதகமாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்த வரை இரண்டு கட்சிகள் பா.ஜ.க., காங்கிரஸ். நீங்கள் எதை உருவாக்க முயற்சித்தாலும், அது அவர்களுக்கு துணையாகத் தான் போய் நிற்கும். நாம் மத்தியிலேயே தலைமையேற்று எதையும் நடத்த முடியாது. ஆகவே, மத்தியிலேயே ஜனநாயகப் பூர்வமாக, மதவாத சக்திகளை எதிர்த்து நிற்கின்ற, அந்த அணிக்குத் தோளோடு, தோள்  நிற்க முடியும். 

 

ஜெயலலிதா மோடியா, லேடியா என்று கேட்ட போது, முழுவதுமாக அ.தி.மு.க.விற்கு வாக்களித்துப் பார்த்தார்கள். எப்படியாவது, தென்னிந்தியாவின் தமிழகத்திலிருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என்று மக்கள் நல்ல நியாயமான தீர்ப்பை அளித்துக் கூட பார்த்தார்கள், அப்போது கூட அதை நாம் செய்ய முடியவில்லை. பல நேரங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைத்தும், அது பலனளிக்காமல் போகின்ற சூழ்நிலையைத் தான் பார்க்கிறோம். 

 

தமிழக அரசு குறைகளைச் சொல்லுகின்ற அளவிற்கு இல்லை என்று சொன்னாலும், பல நடவடிக்கைகளைத் தாமதமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சமூக நீதியை யார் முன்னெடுத்தாலும் நான் வரவேற்கிறேன். ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ.க.வைப் புறக்கணித்துச் சென்றால், நாடு நலம் பெறும்; மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் எனது கருத்து. ஆகவே, அவர்கள் விடாததை நான் தொடுவதாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

 

கர்நாடகாவில் நிலவும் தற்போதைய நிலையைப் பார்த்திருப்பீர்கள்; முகத்தை மூட வேண்டாம் என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தைத் தேடுகிறார்கள். இதைப் போடு, அதைப் போடு என்று மாணவர்களுக்குச் சொல்வதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். முகலாயர்கள் ஆண்ட காலத்திலிருந்து இந்தியத் திருநாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முகத்தை மூடி இஸ்லாமியர்கள் அழகு பார்த்தார்கள். தொழுகைக்குச் செல்ல, கை மற்றும் கால்களைக் கழுவி முகத்தை மூடிவிட்டுச் செல்வார்கள். இதுதான் அவர்கள் வந்திருக்கின்ற வழி. 

 

கரோனா காலத்தில் முகக்கவசத்தை அணியும்படி சொல்லுகிறோம்; கிறிஸ்தவர்கள் இல்லாமல் இங்கு கல்வி இல்லை. இஸ்லாமியர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது." இவ்வாறு புகழேந்தி தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.